ADDED : அக் 11, 2011 11:28 PM
திருவொற்றியூர்:கூடுதல் கட்டணம் கேட்ட தனியார் பள்ளியைக் கண்டித்து, பெற்றோர் மறியல் செய்தனர்.திருவொற்றியூர் ராஜாகடையில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, இரண்டாயிரம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் கேட்டு, நிர்வாகம் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இதனால், அதிருப்தியடைந்த பெற்றோர், நேற்று காலை, பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், அதிருப்தியடைந்த மக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் உதவி கமிஷனர் சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சென்று பேசினர். பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரிடம் பேசினர். இதில், கட்டணச் சிக்கலுக்கு தீர்வு காண்பதாக, நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெற்றோர், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.


