ADDED : ஜூலை 15, 2011 10:05 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, பொந்தம்புளி ஆகிய கிராமங்களில் உள்ள கோயில் விழாக்கள் கொண்டாடுவது தொடர்பாக முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பிச்சை தலைமையிலும், டி.எஸ்.பி., முன்னிலையிலும் சமாதான கூட்டம் நடந்தது.
பொந்தம்புளி கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் 45 ஆண்டுகளுக்கு முன் புரவி எடுப்பு திருவிழா நடத்தப்பட்டது. மீண்டும் தற்போது புரவி எடுப்பு திருவிழா நடத்தவும், பேரையூரிலிருந்து சித்திரங்கடி வழியாக மண்குதிரைகளை கொண்டு செல்லவும் அனுமதி கேட்டு பொந்தம்புளி கிராமத்தினர் முதுகுளத்தூர் டி.எஸ்.பி., யிடம் பாதுகாப்பு கோரியிருந்தனர். ஆனால் அதே தேதியில் சித்திரங்குடியிலும் திருவிழா நடப்பதால், சித்திரங்குடி வழியாக பொந்தம்புளி கிராமத்தினர் பேரையூரிலிருந்து மண்குதிரைகளை எடுத்து சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என கருதி இருகிராமத்தினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் பொந்தம்புளி கிராமத்தினர் புரவி எடுப்பு திருவிழாவிற்காக மண்குதிரைகளை பேரையூரிலிருந்து சித்திரங்குடி ரைஸ்மில் ஸ்டாப் வழியாக எடுத்து செல்லவும், திருவிழாக்கள் நடத்தவும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவும் தீர்மானிக்கபட்டது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் சுந்தரசாமி (ஏனாதி), கருப்புதுரை (சித்திரங்குடி) உட்பட பலர் பங்கேற்றனர்.


