சீனாவின் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்
சீனாவின் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்
சீனாவின் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்
ADDED : ஆக 11, 2011 12:40 AM
பீஜிங் : சீனா தன் முதல் விமானந்தாங்கிக் கப்பலை நேற்று வெள்ளோட்டம் விட்டது.
இதனால், சீன ராணுவத்தின் அதிவேக நவீனமயம் குறித்த கவலை, உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டின் விமானந்தாங்கிக் கப்பலை வாங்கி மறுசீரமைப்பு செய்த சீனா, லியாஓனிங் மாகாணத்தின் டலியன் துறைமுகத்தில் இருந்து, நேற்று அக்கப்பலை வெள்ளோட்டம் விட்டது. 'வர்யாக்' என்ற அக்கப்பல், முன்னாள் சோவியத் யூனியன் அரசால் வடிவமைக்கப்பட்டது. 1991ல் சோவியத் யூனியன் குலைந்த போது, அக்கப்பல் கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அக்கப்பலை, உக்ரைன் அரசு வாங்கியது. இதையடுத்து, சீனா அக்கப்பலை வாங்கி, கடந்த 10 ஆண்டுகளாக மறுசீரமைப்பு செய்து வந்தது. 14ம் தேதி வரை நடக்கும் வெள்ளோட்டம் முடிந்து, துறைமுகத்திற்குத் திரும்பிய பின்னும் மறுசீரமைப்பு தொடரும் என, 'ஷின்ஹுவா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானந்தாங்கிக் கப்பல் வெள்ளோட்டத்தால், சீன ராணுவத்தின் அதி நவீனமயம் மற்றும் தென் சீனக் கடலில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிப்பது ஆகியவை குறித்து, தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஷின்ஜியாங் கலவர விவகாரத்தில், பாகிஸ்தானை சமாதானப்படுத்தும் முயற்சியாக, சீனா முதன் முறையாக, 'பாக்சாட் 1 ஆர்' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயற்கைக்கோள், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின், 'ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில்' இருந்து விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.


