Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரம் :சூடு பிடிக்க துவங்குகிறது தேர்தல் களம்

உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரம் :சூடு பிடிக்க துவங்குகிறது தேர்தல் களம்

உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரம் :சூடு பிடிக்க துவங்குகிறது தேர்தல் களம்

உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரம் :சூடு பிடிக்க துவங்குகிறது தேர்தல் களம்

ADDED : செப் 04, 2011 11:40 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், வரைவு வாக்காளர் பட்டியல், ஓட்டு பெட்டிகள், ஓட்டுச்சாவடி தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டுவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில், வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், ஒன்பது பேரூராட்சிகளும், ஒரு நகராட்சியும் உள்ளன. நகராட்சியில், 36 வார்டுகளும், ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 118 ஊராட்சிகள் உள்ளன. வடக்கு ஒன்றியத்தில் 17 கவுன்சிலர்களும், தெற்கு ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்களும், ஆனைமலை ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்களும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் வார்டுகளுக்கு ஒரு கவுன்சிலர்கள் வீதம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான, உள்ளாட்சி தேர்தல் வரும் அக்., 18 முதல் 20ம் தேதிக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி, ஊராட்சி, பேரூராட்சிகளிலுள்ள மக்கள் தொகையை அடிப்படையாகக்கொண்டு வார்டு எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு சில ஊராட்சிகளில் தற்போது புதிதாக இரண்டு முதல் ஐந்து வார்டுகள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட சில பேரூராட்சிகளிலும், வார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக மறு சீரமைக்கப்பட்ட வார்டுகளை அடிப்படையாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. இப்பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில், தேர்தலுக்கு ஓட்டு சீட்டு பயன்படுத்தவுள்ளதால், ஒன்றியங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டிகளை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பெட்டிகளுக்கு எண்ணெய் கொண்டு மொழுகி, பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில், ஓட்டு சாவடிகள் தயார்படுத்தப்பட்டு, தேர்தலுக்கு கூடுதலாக தேவைப்படும் பெட்டிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடக்கிறது. முதல்கட்டமாக, அந்தந்த ஒன்றிய எல்லைக்குள் வசிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் குறித்த விருப்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் இறுதி செய்யப்பட்டு, தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே உள்ளாட்சி பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. துவங்கியது திண்ணை பிரசாரம்: ஒன்றியங்களில், உள்ளாட்சி தேர்தல் பணிக்காக ஆயத்த பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், கிராமங்களில் அரசியல் புள்ளிகள் திண்ணை பிரசாரத்தை துவங்கியுள்ளனர். தற்போதுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், நிறைவு செய்யப்படாமல் உள்ள வளர்ச்சி பணிகளை வேகப்படுத்துவதிலும், வளர்ச்சி பணிகளில் உள்ள நிறைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்கட்சியினர், வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளனர். இதனால், கிராமங்கள் 'களை' கட்ட துவங்கியுள்ளன. பல ஊராட்சிகளில் வார்டு எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதால், புதிய வாக்காளர்களிடம் ரகசியமாக ஓட்டு சேகரிக்கும் பணியில் அரசியல் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us