மத்திய அமைச்சரின் நுனிவிரலில் "சென்னை' : புதிய அமைச்சர்களில் இப்படியும் "தமிழ் முகம்'
மத்திய அமைச்சரின் நுனிவிரலில் "சென்னை' : புதிய அமைச்சர்களில் இப்படியும் "தமிழ் முகம்'
மத்திய அமைச்சரின் நுனிவிரலில் "சென்னை' : புதிய அமைச்சர்களில் இப்படியும் "தமிழ் முகம்'
மத்திய பழங்குடியினர் நலம் மற்றும் பஞ்சாயத்துராஜ் இலாகா கேபினட் அமைச்சராகியுள்ளார் கிஷோர் சந்திரதேவ்.
ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர், ஏற்கனவே தனது 30வது வயதிலேயே சரண் சிங் அமைச்சரவையில் இணையமைச்சராக இருந்தவர். அப்போது, நிலக்கரித் துறைக்கு கேபினட் அமைச்சராக இருந்த பிஜு பட்நாயக்கின் கீழ் இணையமைச்சராக கிஷோர் பணியாற்றியுள்ளார்.
1977ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஏழு முறை லோக்சபாவுக்கு எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் இவர், 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் கூட, முழுக்க முழுக்க சென்னைவாசி. தனது பேச்சு, பழக்கவழக்கங்கள், எண்ணங்கள், ரசனைகள் என அனைத்திலுமே சென்னை பிரதிபலிக்கிறது.
கிஷோர் சந்திரதேவ் தனது சென்னை வாழ்க்கை பற்றி கூறியதாவது: எனது தந்தை ராஜா குருபம், ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அமைச்சரவை அமைக்க முடியாமல் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டபோது, ஆந்திராவில் எனது தந்தை சுயேச்சைகளாக நிறுத்தி வெற்றி பெற்ற ஒன்பதுக்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை, ராஜாஜி கோரினார். இதை ஏற்று அரசுக்கு ஆதரவு அளித்து, ராஜாஜியின் அமைச்சரவையில் உணவு அமைச்சராக பதவியேற்க இருந்தார். அதற்கு முந்தைய நாள், காலில் ஆணி குத்தி அதற்கு தவறுதலான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மரணம் அடைந்துவிட்டார். எனது தாத்தாவும் சென்னை மாகாண மேலவையில் உறுப்பினராக இருந்தவர்.
பள்ளிப் படிப்புக்காக 1956ல் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தேன். ஆழ்வார்பேட்டையில் வாரண் சாலையில் ஒரு பங்களாவை 150 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்து குடியேறினோம். பிறகு, கோபாலபுரம் இரண்டாவது தெருவில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினோம்.
எங்கள் வீட்டிற்கு மிக அருகில் தான், கருணாநிதியின் வீடு உள்ளது. அவரது மூத்த மகன் மு.க.முத்து எனது நெருங்கிய நண்பன். அழகிரி, ஸ்டாலின் ஆகியோருடனும் நல்ல நெருக்கம். அழகிரியும், நானும் ஒரே பள்ளியில் படித்தோம். பள்ளி நாட்களில் எல்லாரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம்; கோபாலபுரம் கான்ட்ரான் ஸ்மித் சாலையில் இருக்கும் மைதானத்தில் தான் விளையாடுவோம்.
சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் பயின்றேன். பின்னர் சேத்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி பள்ளியில் படித்தேன். இந்து முரளி என்னுடைய வகுப்பு தோழன். சிதம்பரமும், இந்து ராமுவும் எனக்கு இரண்டு ஆண்டுகள் சீனியர்கள். சைக்கிளில் பள்ளிக்குச் சென்றேன். அந்த சைக்கிளில் தான் சென்னை நகர் முழுவதும் சுற்றித் திரிந்து அலைந்ததுண்டு.
விவேகானந்தா கல்லூரியில் பியுசி முடித்துவிட்டு, தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ., எக்கனாமிக்ஸ் படித்தேன். புகழ் பெற்ற பேராசிரியர் சி.டி.குரியன் எனக்கு பாடம் எடுத்தவர். பிறகு எம்.ஏ., அரசியலும் அங்கேயே படித்தேன். மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் அங்கு எனது வகுப்புத் தோழன்.
மின்சார ரயிலில் தாம்பரம் சென்று திரும்பும் நான், சென்னையைச் சுற்றுவதெல்லாம் சைக்கிளில் தான். தனி வீடு, பசுமையான மரங்கள் என சென்னை இருக்கும். டிபன் சாப்பிடுவதற்கு உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் தான், அசைவம் என்றால் மவுண்ட் ரோடு புகாரி ஓட்டல் செல்வோம். கோபாலபுரத்தில் பார்த்தசாரதி என்ற வித்துவானிடம் வயலின், புல்லாங்குழல், பியானோ கற்றுக்கொண்டேன். கல்லூரி நாட்களில் ஆனந்த் அமிர்தராஜ் வந்து எங்களுடன் டென்னிஸ் ஆடுவார்.
நாங்கள் கோபாலபுரத்தில் இருந்த வீட்டை 1972ல் முரசொலி மாறனுக்கு விற்றுவிட்டு ஜெய்ப்பூர் காலனியில் குடியேறினோம். அங்கு தான் எனது அம்மாவும், சகோதரியும் இன்னமும் குடியிருக்கின்றனர். மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து போவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வாறு கிஷோர் சந்திரதேவ் கூறினார்.
பழங்குடியினர் நல சட்டம் அமல்படுத்த நடவடிக்கை : பழங்குடியினர் நலம் என்பது சவாலான துறை. இருப்பினும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப் போகிறேன். கடந்த ஆட்சியில் பழங்குடியினர் நலச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை சரிபார்க்கும் பொறுப்பு, பார்லிமென்டில் என்னிடம் வழங்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராகவும் இருந்தேன். அந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல் சில மாநிலங்கள் உள்ளன. அதை அமல்படுத்த பாடுபடுவேன்.
நக்சலைட்கள் பிரச்னை என்பது வெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது அல்ல; சமூகப் பொருளாதார பிரச்னை அது. காடுகளில் குடியிருக்கும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்வேன். இவ்வாறு கிஷோர் கூறினார். அமைச்சர் அழகிரி நேற்று கிஷோரின் இல்லம் தேடி வந்து, வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.


