Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கு வரவேற்பு

தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கு வரவேற்பு

தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கு வரவேற்பு

தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கு வரவேற்பு

ADDED : செப் 08, 2011 11:46 PM


Google News
Latest Tamil News

சென்னை:தூத்துக்குடி, கொழும்பு இடையே இயக்கப்படும், பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு, அதிக வரவேற்பு காணப்படுகிறது.தூத்துக்குடியிலிருந்து, 1907ல் ஜூன் மாதம், 'கலிலியோ, லாவோ' என்ற இரு சுதேசி கப்பல்களை வ.உ.சி., இயக்கினார்.

சில மாதங்களில், ஆங்கிலேயர்களால், இக்கப்பல் சேவை தடை செய்யப்பட்டது.

இதையடுத்து, 104 ஆண்டுகளுக்கு பின், சென்ற ஜூன் மாதம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி-கொழும்பு இடையே, பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். 'பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், 'ஸ்காட்டிய பிரின்ஸ்' பயணிகள் கப்பல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து, கொழும்புக்கும், புதன் மற்றும் திங்கள் கிழமைகளில், கொழும்பிலிருந்து, தூத்துக்குடிக்கும் இயக்கப்பட்டு வருகிறது.



இரு வழித் தடங்களிலும், மாலை 6 மணிக்கு புறப்படும் இக்கப்பல், 12 மணி நேர பயணத்திற்கு பின், மறுநாள் காலை, 8 மணிக்கு மறுமுனையை சென்றடைகிறது.ஒன்பது அடுக்குகளை கொண்ட இக்கப்பல், 13 மைல் வேகத்தில் செல்கிறது. இதில், 1,044 பயணிகள் பயணம் செய்யலாம். இதுவரையில், இக்கப்பலில் அதிகபட்சமாக, 462 பேர் பயணம் செய்துள்ளனர். சராசரியாக, 250 பேர் வரை பயணம் செய்கின்றனர். இதில், 175 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.கப்பலில், 111 எக்கனாமி அறைகள், 22 டீலக்ஸ் அறைகள், 169 சூப்பர் டீலக்ஸ் அறைகள், 11 முதல் வகுப்பு அறைகள் உள்ளிட்ட, 317 அறைகள் உள்ளன. இதுதவிர ஓட்டல், பார்ட்டி ஹால், மருத்துவமனை, பார் ஆகியவை உள்ளன.



இக்கப்பலில் பயணம் செய்வோர், கட்டாயம் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். கொழும்பு சென்றவுடன், இலங்கை சார்பில், 30 நாட்கள் தங்கும் வகையில், சுற்றுலா விசா வழங்கப்படுகிறது.தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்வதற்கும், கொழும்பிலிருந்து தூத்துக்குடி வருவதற்கும், குறைந்தபட்சமாக, 3,128 ரூபாயும், அதிகபட்சமாக, 20 ஆயிரத்து, 470 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, இக்கப்பல் சேவைக்கு, பொது மக்களிடத்தில், அதிக வரவேற்பு காணப்படுகிறது.



இதுகுறித்து, கப்பல் சேவைக்கான டிக்கெட் விற்பனை செய்யும் ஸ்டார் டெஸ்டினேஷன் மேனஜ்மென்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'தமிழகத்தைக் காட்டிலும் பெங்களூரூ, கேரளாவிலிருந்து அதிகம் பேர், இக்கப்பல் சேவையை பயன்படுத்த முன்பதிவு செய்கின்றனர். தற்போது, கப்பலுக்குள் பார், நீச்சல் குளம், சினிமா என, பல பொழுதுபோக்கு அம்சங்கள் அறிமுகம் செய்திருப்பதால், ஐ.டி., ஊழியர்கள், புது திருமண தம்பதியர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us