தேர்தல் பணிகள் துவக்கம்: ஓட்டு இயந்திரங்கள் தயார்
தேர்தல் பணிகள் துவக்கம்: ஓட்டு இயந்திரங்கள் தயார்
தேர்தல் பணிகள் துவக்கம்: ஓட்டு இயந்திரங்கள் தயார்
ADDED : ஆக 13, 2011 01:17 AM

சிவகங்கை : உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான 45 ஆயிரம் ஓட்டு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபரில் தேர்தல் நடத்தப்படும் என முதல்வர் ஜெ., சட்டசபையில் அறிவித்தார். சட்டசபை தேர்தல் வாக்காளர் அடிப்படையில் ஊராட்சி, ஒன்றிய கவுன்சில் வார்டு எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தாழ்த்தப்பட்டோர் போட்டியிட்ட வார்டுகள் எஸ்.சி.,பெண்கள், பொது வார்டுகள் பொது பெண்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக ஊராட்சி, ஒன்றிய கவுன்சில் வார்டுகள் சீரமைத்த விபரம், வார்டுகள் மாற்றி அமைக்கப்பட்ட விபரங்களை, மாநில தேர்தல் கமிஷனுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது. மாவட்ட அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள்
தேர்தல் விதிமுறைகளில் ஏதாவது மாற்றம் செய்யப்படவேண்டுமா, வாக்காளர் பட்டியல் தொடர்பான புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, மின்னனு இயந்திரங்களின் தற்போதைய இருப்பு விபரங்களை கேட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான வழக்குகள் பதிவு ஆகியுள்ள ரிஷிவந்தியம், பெரியகுளம், திருப்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர், கும்பகோணம், திருச்சுழி, திருச்செந்தூர், எழும்பூர்,குன்றத்தூர் உள்ளிட்ட 11 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்களை தவிர மற்ற தொகுதிகளில் உள்ள ஓட்டு இயந்திரங்களை அந்தந்த மாவட்டத்திற்கு தேவையான அளவு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,''சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்களில் பிரச்னை உள்ள 11 தொகுதி இயந்திரங்கள் தவிர மற்ற தொகுதிகளிலுள்ள இயந்திரங்கள் உள்ளாட்சி தேர்தலக்கு பயன்படுத்த அனுப்பி வைக்கப்படும். கூடுதலாக இயந்திரங்கள் தேவைப்பட்டாலும் இருப்பு உள்ளது, '' என்றார்.


