திராவிட கட்சிகளுடன் ஒட்டுமில்லை; உறவுமில்லை: ராமதாஸ்
திராவிட கட்சிகளுடன் ஒட்டுமில்லை; உறவுமில்லை: ராமதாஸ்
திராவிட கட்சிகளுடன் ஒட்டுமில்லை; உறவுமில்லை: ராமதாஸ்

பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:இந்த தேர்தல் ஊழல் கட்சிகளுக்கும், நேர்மையான பா.ம.க., கட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். 47 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் நாட்டை சீரழித்து விட்டன. அந்த திராவிடக் கட்சிகளுக்கு விடை கொடுக்க வேண்டும். அக்கட்சிகளின் அத்தியாயத்தை முடிக்க வேண்டும்.பா.ம.க., தனித்து போட்டியிட வேண்டும் என்ற முடிவு எடுத்ததை, தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவை எப்போதோ எடுத்திருந்தால், சட்டசபை தேர்தலில், 50 அல்லது, 60 எம்.எல்.ஏ.,க்களை பெற்று, சிறந்த எதிர்க்கட்சியாக, பா.ம.க., வந்திருக்கும்.காலம் கடந்து எடுத்த முடிவாக இருந்தாலும், இனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளுடன் ஒட்டுமில்லை; உறவுமில்லை. இனி அக்கட்சிகளை வேரறுப்பது; ஒழிப்பது ஒன்றே, பா.ம.க.,வின் பணியாக இருக்கும்.
திராவிட கட்சிகளுக்கு எந்த கொள்கையும் கிடையாது. கொள்ளையடிக்கும் ஒரே கொள்கையை மட்டுமே கொண்டுள்ளன. சமுதாய அளவில் தரமான கல்வி, மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி செய்து தருவது என்பது உள்பட எந்த கொள்கையும் கிடையாது. சமுதாயத்தை சீரழிக்கும் மதுவை கொடுத்து, நான்கு தலைமுறை இளைஞர்களை கெடுத்து விட்டனர். தற்போதைய இளைஞர்களையும் மதுவுக்கும், சினிமாவுக்கும் அடிமையாகி விட்டனர். அதிலிருந்து மீட்க பெரும்பாடுபட்டு வருகிறோம். மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை மக்கள் உழைப்பால் வாங்க வேண்டும்.கடந்த, 1967க்கு முன் காங்கிரஸை ஒழித்தனர். தமிழ், தமிழ்... என்றனர்; தமிழ் இப்போது அவர்கள் குடும்ப, 'டிவி'யில் கூட இல்லை. இதை தட்டிக்கேட்க தமிழகத்தில் ராமதாஸ் மட்டுமே உள்ளார். வேறு யாருக்கும் தைரியம் இல்லை.இவ்வாறு ராமதாஸ் பேசினார். பா.ம.க., மாநில தலைவர் மணி உள்பட பலர் பேசினர்.


