அத்வானியின் ரத யாத்திரை துவங்கியது: மத்திய அரசு மீது ஆவேச தாக்கு
அத்வானியின் ரத யாத்திரை துவங்கியது: மத்திய அரசு மீது ஆவேச தாக்கு
அத்வானியின் ரத யாத்திரை துவங்கியது: மத்திய அரசு மீது ஆவேச தாக்கு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர வலியுறுத்தியும், ரத யாத்திரையை துவங்கப் போவதாக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி அறிவித்து இருந்தார்.லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜெ.பி.,) பிறந்த ஊரான, பீகார் மாநிலம் சிதாப்டியாராவில் துவங்கி, டில்லியில் முடிவடையும் இந்த யாத்திரை, 38 நாட்கள் நடக்கும் என்றும் அறிவித்து இருந்தார்.யாத்திரையை துவங்குவதற்காக, நேற்று பீகார் மாநிலத்துக்கு வந்த அத்வானியை, முதல்வர் நிதிஷ் குமார் வரவேற்றார்.ஜெ.பி., வசித்த வீட்டுக்கு சென்ற அத்வானி, அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில், அத்வானி பேசியதாவது:கடந்த 1970களில், காங்கிரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டியவர், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண். அதனால் தான், இந்த யாத்திரையை, அவர் பிறந்த மண்ணில் இருந்து துவங்குகிறேன். இந்த விஷயத்தில், எனக்கு அவர் தான் முன்னோடி.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஊழல் அதிகரித்து விட்டது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, நாட்டுக்கு திரும்ப கொண்டு வருவதற்காகவுமே, இந்த யாத்திரையை துவக்கியுள்ளேன்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியால், நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இழந்த நம்பிக்கையை திரும்ப கொண்டு வர வேண்டும் என, விரும்புகிறேன். ஊழல் இல்லாத அரசியல், சிறப்பான நிர்வாகம் ஆகியவை தான், நம் குறிக்கோள். யாத்திரை செல்லும்போது, இதை மக்களிடம் எடுத்துக் கூறுவேன்.பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையை எதிர்த்து தான், சுதந்திரப் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் அரசின் ஊழலை எதிர்த்து, ஜெ.பி., போராட்டம் நடத்தினார். கடந்த 1947ல் நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால், ஜெ.பி.,யின் சொந்த ஊருக்கு, இப்போது தான் மின்சார வசதியே கிடைத்துள்ளது. இதற்கு முன், பீகாரை ஆட்சி செய்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதது தான் இதற்கு காரணம்.நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றதும், பீகார் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில், கடந்த 2005ல் இருந்த நிலவரம் வேறு, தற்போதுள்ள நிலவரம் வேறு. நிதிஷ் குமாரின் திட்டமிட்ட, சிறப்பான நிர்வாகத்தால், மாநிலத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அத்வானி பேசினார்.
பாஜ., மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, அனந்தகுமார் உள்ளிட்டோர், ஊழலை ஒழிப்பதற்காக அத்வானி மேற்கொண்டுள்ள முயற்சியை, பாராட்டி பேசினர்.
நிதிஷ் குமார்பீகார் முதல்வர்: ஜெ.பி., பிறந்த மண்ணிலிருந்து யாத்திரையை துவக்கியதற்காக அத்வானிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் மேற்கொண்டுள்ள யாத்திரைக்கு, வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், செயல்களாலும் என் ஆதரவு உண்டு. ஜெ.பி.,யின் போராட்டமும், பீகாரில் தான் துவங்கியது. அப்போது, காங்கிரஸ் அரசு தோற்கடிக்கப்படும் என, யாருமே நினைக்கவில்லை. அதேபோல் தான், தற்போதைய சூழலும் உள்ளது. அத்வானியின் ரத யாத்திரை, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கும்''
லாலு பிரசாத் யாதவ்-ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்: இந்த யாத்திரை மூலம், பீகார் மாநிலத்தை அத்வானி அவமதித்து விட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வுக்கு எதிரான கொள்கைகளை உடையவர். இந்த யாத்திரையை துவக்கி வைத்ததன் மூலம், தன்னை மதச்சார்பற்றவர் என கூறிக் கொள்ளும், நிதிஷ் குமாரின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது''
* அத்வானி துவங்கியுள்ள ரத யாத்திரை, 38 நாட்கள் நடக்கிறது. 23 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் தயாரிக்கப்பட்டுள்ளது.


