மத்திய அமைச்சரவை முழுமையாக மாற்றம் பெறவில்லை : கருணாநிதி
மத்திய அமைச்சரவை முழுமையாக மாற்றம் பெறவில்லை : கருணாநிதி
மத்திய அமைச்சரவை முழுமையாக மாற்றம் பெறவில்லை : கருணாநிதி
UPDATED : ஜூலை 14, 2011 12:11 AM
ADDED : ஜூலை 12, 2011 11:29 PM

சென்னை: ''மத்திய அமைச்சரவை முழுமையாக மாற்றம் பெறவில்லை.
முழுமையாக மாற்றம் பெற்ற பின், மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
நேற்று அவர் சென்னை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:
மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதே?
முழுமையாக மாற்றம் பெறவில்லை. முழுமையாக மாற்றம் பெற்ற உடன், அது குறித்து சொல்கிறேன்.
அமைச்சரவையில் இடம் கேட்பது குறித்து, பொதுக்குழுவில் விவாதிப்பீர்களா?
பொதுக்குழுவில் விவாதிக்கப்படும். அமைச்சரவை மாற்றம் குறித்தே கேட்கிறீர்கள். புதிதாக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்தெல்லாம் கேட்க மாட்டீர்களா?
நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக, தலைமைக் கழகத்தில் முறையிடலாம் என அறிவித்தீர்கள். புகார்கள் வந்துள்ளதா?
கட்சித் தொண்டர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. வழக்கறிஞர்கள் விசாரித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட வழக்கறிஞர்களிடம் அனுப்புகின்றனர். உண்மையில் நில அபகரிப்பு நடந்திருந்தால், நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை.
பட்ஜெட்டிற்கு முன்பாகவே, வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதே?
மக்கள் தலையில் விழுந்துள்ள வரிச்சுமை, அவர்களாகவே, தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டது.
வரி உயர்வை எதிர்த்து, எதிர்க்கட்சி நிலையில் இல்லாத தி.மு.க., போராட்டங்களில் ஈடுபடுமா?
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும், திராவிடர்களுக்காக பாடுபடும் இயக்கம் என்பது நிதர்சனமான உண்மை.
சமச்சீர் கல்வி பிரச்னை இன்னும் முடியவில்லையே?
மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஓட்டளித்த வாக்காளர்களுக்கும்தான் கஷ்டம்.
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உங்களை சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?
அப்போது பேசியது குறித்து, பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். கூட்டம் முடிந்த பின் விவரம் அறிவிக்கப்படும்.
கனிமொழி வழக்கு குறித்து பேசினீர்களா?
பேசவில்லை.
மத்தியில் அமைச்சர் பதவி கேட்காததால், தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைகிறதே?
இது குறித்து பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்வோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.


