ADDED : ஆக 21, 2011 11:50 PM

கீழக்கரை : கீழக்கரை அருகே, பரிகார பூஜை செய்வதற்காக தேசிய பறவையான மயில் தலையை வெட்டும் கொடுமை நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி இடையே உள்ள வயல்வெளிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன.
கிழக்கு கடற்கரை சாலையில் வரும் சுற்றுலா பயணிகள், மயில், தோகை விரித்து ஆடுவதை பார்த்து ரசித்து செல்வர்.
இந்நிலையில், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, பரிகார பூஜை செய்வதற்காக கூறி ஜோதிடர்கள், மயிலின் தலையை அறத்து கொண்டு வர சொல்வதாக தெரிகிறது. இதனால், பலர், மயில்களுக்கு விஷம் வைத்து கொன்று, தலையை வெட்டி செல்கின்றனர். நேற்று முன்தினம், கீழக்கரை முள்ளுவாடி பஸ் ஸ்டாப் அருகே குப்பையில் தலை அறுக்கப்பட்டு, தோகைகள் சிதறிய நிலையில் மயில் உடல் ஒன்று கிடந்தது. இதுகுறித்து வனகாப்பாளர் முத்துகர்ணன் கூறுகையில், 'மயில் இறந்து கிடக்கும் தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை. பறந்து வரும் போது பஸ்சில் அடிபட்டு இறந்திருக்கலாம்' என்றார்.


