ADDED : ஜூலை 28, 2011 07:10 PM
தேனி: தேவாரத்தில், லாஞ்சர் குண்டு வெடித்தது தொடர்பாக, தேனி போலீசார், கான்பூர் ராணுவ தளவாட தொழிற்சாலையில், விசாரணை நடத்த சென்றுள்ளனர். தேனி மாவட்டம் தேவாரத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், இரும்பு வியாபாரி உட்பட 2 பேர் இறந்தனர். லாஞ்சர், இரும்பு வியாபாரியிடம் எப்படி வந்தது என்பது குறித்து, தேவாரம் உள்ளூர் போலீசார், கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கான்பூர் பயணம்: பிரவின்குமார் அபிநபு எஸ்.பி., கூறியதாவது: தேவாரத்தில் வெடித்த குண்டு, 'டி.என்.டி., ரக பாரா பார்ம்' லாஞ்சர் வகையை சேர்ந்தது. போரின் போது ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது, இவ்வகை குண்டை பயன்படுத்துவர். இது மேலே சென்று வெடித்து வெளிச்சத்தை ஏற்படுத்தும். இதைக் கொண்டு, எதிரிகளை சுட்டு வீழ்த்த முடியும். பலியான பெண்ணின் உடலின் பாகத்தில் ஒட்டி இருந்த துகளில் இருந்து, லாஞ்சரின் ரகசிய எண் அடிப்படையில், இக்குண்டு, கான்பூர் ராணுவ தளவாட தொழிற்சாலையில் 1998ல் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அங்கிருந்து, ராணுவத்தின் எந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்ற விவரங்களை சேகரிக்க, போலீஸ் தனிப்படை, கான்பூர் சென்றுள்ளது. இவ்வாறு அபிநபு எஸ்.பி., கூறினார்.


