Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளாட்சி தேர்தலால் பட்டாசு விற்பனை ஜோர் தீபாவளிக்கு முன் வியாபாரிகள் இரட்டை மகிழ்ச்சி

உள்ளாட்சி தேர்தலால் பட்டாசு விற்பனை ஜோர் தீபாவளிக்கு முன் வியாபாரிகள் இரட்டை மகிழ்ச்சி

உள்ளாட்சி தேர்தலால் பட்டாசு விற்பனை ஜோர் தீபாவளிக்கு முன் வியாபாரிகள் இரட்டை மகிழ்ச்சி

உள்ளாட்சி தேர்தலால் பட்டாசு விற்பனை ஜோர் தீபாவளிக்கு முன் வியாபாரிகள் இரட்டை மகிழ்ச்சி

ADDED : அக் 11, 2011 02:34 AM


Google News
ஈரோடு : ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தையொட்டி, தீபாவளிக்கு முன்னதாகவே பட்டாசு விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது.

மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஈரோடு மாநகராட்சியில், 488 பேர் கவுன்சிலருக்கும்,18 பேர் மேயர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். மாநகராட்சியின் பல வார்டுகளில், வேட்பு மனு தாக்கலின் போதே வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை துவக்கினர்.பிரச்சாரத்தின் போது வாக்காளர்களை கவர, பல வண்ண வண்டிகள், கொடிகள், துண்டு பிரசுரங்கள், கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்புவது என பல வழிகளை கையாண்டு வருகின்றனர்.வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க அனைத்து வேட்பாளர்களும் பயன்படுத்துவது பட்டாசுகளையும், வாண வேடிக்கையையும்தான். இதனால் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, பட்டாசுகளின் விற்பனை ஜரூராக நடந்து வருவதால், பட்டாசு விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பட்டாசு கடை உரிமையாளர்கள் கூறியதாவது: வழக்கமாக தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, பட்டாசு விற்பனை களைகட்டும். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வேட்பாளர்கள் பலரும் தங்கள் பிரச்சார வாகனத்தின் முன், பட்டாசுகளை வெடித்து வாக்காளர்களை கவர்வதில் மும்முரம் காட்டுகின்றனர். எனவே, இந்த ஆண்டு பட்டாசு விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலால், ஃபிளாஷ் சவுண்ட் கிராக்கர் ரகம், டீலக்ஸ் ரக வெடிகள், 24, 28, 50 டீலக்ஸ் வகை வெடிகள், 100 வாலா முதல் 20 ஆயிரம் வாலா சர வெடிகள், புல்லட் பாம், 555 மிலிட்டரி பாம், பூச்சட்டி, ராக்கெட் உள்ளிட்ட பட்டாசு வகைகள் அதிகளவில் விற்பனையாகின்றன.உள்ளாட்சி தேர்தல் விற்பனை, தீபாவளி விற்பனை என்று பட்டாசு விற்பனை இரண்டு மடங்கானதால், இரட்டை மகிழ்ச்சியில் பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us