Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் :அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார்

நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் :அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார்

நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் :அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார்

நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் :அ.தி.மு.க., பிரமுகர் மீது புகார்

ADDED : செப் 04, 2011 11:40 PM


Google News
கோவை : ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக, வீடியோ ஆதாரத்துடன், அ.தி.மு.க., பிரமுகர் மீதான புகாரால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போத்தனூரை சேர்ந்த நகை வியாபாரி கிருஷ்ணன் (52); வெளி மாநிலங்களில் இருந்து நகைகளை வாங்கி, கோவை நகைக்கடைகளுக்கு வினியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, வீடியோ ஆதாரத்தைக் காட்டி, கோவை அ.தி. மு.க.,பிரமுகர் ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது:என்னை சந்தித்த கோவையை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர், தரமற்ற நகைகளை அடகு வைப்பதும், பின், அதை மீட்பதுமான புகார் போலீசுக்கு கிடைத்துள்ளது. என்னை கோவை மாநகரில் பணிபுரியும் 2 உதவி கமிஷனர்கள் தான் அனுப்பியுள்ளனர். உன் மீதான புகார்களுக்கு அந்த அதிகாரிகளிடம் ஆதாரங்கள் உள்ளன. விரைவில், வழக்குப்பதிவு செய்து உங்களை கைது செய்யவுள்ளனர். வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், 10 லட்சம் தர வேண்டும். தர மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க போலீசார் தயாராக உள்ளனர் என, மிரட்டல் விடுத்தார். உஷாரான நான், அவர் என்னை மிரட்டியதை, எனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த 'பேனா காமிரா' மூலம் படம் பிடித்துள்ளேன். அதற்குப் பின்னும், அந்த பிரமுகர் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார். கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 2 உதவி கமிஷனர்களின் பெயரையும், தன்னை மிரட்டிய அ.தி.மு.க., பிரமுகரின் பெயரையும் கமிஷனரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், வீடியோ ஆதாரத்தை தரவும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். புகாரைத் தொடர்ந்து, நகை வியாபாரிக்கு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க., பிரமுகர் குறித்து ரகசிய விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆளுங்கட்சிப் பிரமுகர் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள் மீதான புகாரில், மாநகர போலீசாரின் நடவடிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us