ADDED : செப் 08, 2011 10:23 PM
அன்னூர் : புதிய விதிமுறையால், கல்விக்கடன் கிடைக்காமல்
மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சி மாணவ, மாணவியர் திண்டாடுகின்றனர்.
மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியில், செம்மாணி செட்டி பாளையம்,
குருக்கம்பாளையம், அருகம்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர், செந்தாம்பாளையம்,
ஓரைக்கால்பாளையம் உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. அன்னூர் ஒன்றியத்திலேயே
பெரிய ஊராட்சி. இந்த ஊராட்சி மக்கள் 25 ஆண்டுகளாக கணேசபுரத்தில் உள்ள பாரத
ஸ்டேட் வங்கியில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு துவக்கி வங்கி சேவை
பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு 70 முதல் 80 பேர் கல்வி கடன் பெற்று முன்னணி
கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் கல்விக்கடன்
பெற மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள் தங்கள்
பெற்றோருடன், கணேசபுரம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றனர். அங்கு வங்கி
அதிகாரி, 'உங்கள் ஊராட்சி சூலூர் தாலுகா, வாகராயம்பாளையம், இந்தியன் வங்கி
கிளையில் சேர்க்கப்பட்டு விட்டது. கல்விக்கடன் பெற நீங்கள் அங்குதான் செல்ல
வேண்டும்' என, கூறி விட்டனர். இதையடுத்து மாணவர்கள், பெற்றோருடன்,
வாகராயம்பாளையம் இந்தியன் வங்கி கிளைக்கு சென்றனர். அங்குள்ள அதிகாரிகள்,
'இந்த வங்கியில் பெற்றோருக்கு சேமிப்பு கணக்கு வேண்டும். சில மாதங்களாவது
வரவு செலவு செய்திருக்க வேண்டும்' என்று கூறி கல்விக்கடன் தர
மறுக்கின்றனர். கணேசபுரம் வங்கியில் 25 ஆண்டுகளாக வரவு செலவு செய்து வந்த
எங்களை வாகராயம்பாளையத்திற்கு மாற்றி விட்டனர். கணேசபுரத்தில் இருந்து ஒரு
கி.மீ., தொலைவில் உள்ள எங்களை 15 கி.மீ., தொலைவில் உள்ள வாகை வங்கி
கிளையுடன் சேர்த்து விட்டனர். இங்கிருந்து வாகைக்கு மூன்று பஸ் மாறி செல்ல
வேண்டும். இது குறித்து கோவை கலெக்டர் கருணாகரனிடம் புகார் தெரிவித்தோம்.
உடனே மாவட்டத்தின் முன்னோடி (லீட் பாங்க்) வங்கி பொது மேலாளரிடம் மொபைலில்
பேசினார். அந்த அதிகாரி 'எங்களிடம் ஒரு வாரத்தில் உங்கள் ஊராட்சி மீண்டும்
கணேசபுரத்திற்கு வர நடவடிக்கை எடுக்கிறேன்' என, தெரிவித்தார். மூன்று
வாரங்களாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கல்விக்கடனுக்காக
காத்திருக்கும் எங்கள் ஊராட்சியை சேர்ந்த 75 மாணவர்கள் என்ன செய்வது என
தெரியாமல் உள்ளனர்.சில கல்லூரிகளில் கட்டணம் செலுத்தாததால், மாணவர்களை
திருப்பி அனுப்பி விட்டனர். கோவில்பாளையம் மற்றும் அன்னூரிலுள்ள வங்கி
கிளைகளுக்கு சென்று கேட்டாலும் எங்கள் சர்வீஸ் ஏரியா இல்லை என்று கூறி கடன்
தர மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஊராட்சி மக்கள் தெரிவித்தனர்.


