Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மேலும் 21 கல்வி மையம் துவக்குகிறது "ஆப்டெக்'

மேலும் 21 கல்வி மையம் துவக்குகிறது "ஆப்டெக்'

மேலும் 21 கல்வி மையம் துவக்குகிறது "ஆப்டெக்'

மேலும் 21 கல்வி மையம் துவக்குகிறது "ஆப்டெக்'

ADDED : ஆக 20, 2011 11:30 PM


Google News
''தமிழ்நாட்டில் உள்ள 'ஆப்டெக்' கல்வி மையங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது; கல்லூரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மென்பொருள் திறன், ஆங்கில மொழி திறன் உள்ளிட்ட பல்வேறு கல்விகளை அளிக்க திட்டமிட்டுள்ளது,'' என, 'ஆப்டெக்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நினந்த் கார்பே கூறினார்.கோவையில் தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:'ஆப்டெக் நிறுவனம், 25 ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 16 லட்சம் பேருக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கல்வியை கொடுத்து உதவியிருக்கிறது. 40 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது. அரினா, மாக் என்ற இருவித அனிமேஷன் தொடர்பான கல்வியை அளித்து வருகிறது. விருந்தோம்பல் துறை மேலாண்மையிலும் பாடங்களை நடத்தி வருகிறது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கம்ப்யூட்டர் சார்ந்த சேவை நிறுவனங்கள், பணியாளர்களை தேர்வு செய்ய 'ஆன்லைன்' முறையிலான தேர்வுகளை வடிவமைத்துள்ளோம். இந்த தேர்வுகளை நடத்த நாடு முழுவதும் 70 மையங்கள் உள்ளன. பொதுவான தேர்வு முறையில் மாணவர்களை தேர்வு செய்ய திட்டங்களை வகுத்துள்ளோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மாணவர்களை எளிதாக தேர்வு செய்ய, நிறுவனங்களின் சங்கமான 'நாஸ்காம்' உடன் இணைந்து, புதிய தேர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த தேர்வு முறையில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பட்டதாரிகளை எளிதாக அடையாளம் கண்டு பணிக்கு சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் அதிக அளவில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் வெளி வருகின்றனர். அதேசமயம், இவர்கள் அனைவருக்குமே வேலை கிடைப்பதில்லை. ஆனால், கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், ஆள்பற்றாக்குறை நீடித்து வருகிறது. திறமையான பட்டதாரிகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் அனுபவம் இல்லாததால் இந்த இடைவெளி ஏற்படுகிறது. திறமை வாய்ந்த இன்ஜினியரிங் பட்டதாரிகளில், யாரை தேர்வு செய்வது என்ற போட்டி வரும்போது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆங்கில புலமையும், தகவல் தொடர்பில் பேச்சு திறனும் வாய்ந்தவர்களை தேர்வு செய்கின்றனர்.எனவே, இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான துறையை தேர்வு செய்யவும், அதற்கேற்ற வகையில் தங்களை வடிவமைத்துக் கொள்ளவும் ஆப்டெக் நிறுவனம் புதிய மையங்களை உருவாக்க உள்ளது. இந்த மையங்களில் ஆங்கிலமும் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் 42 ஆப்டெக் கல்வி மையங்கள் உள்ளன. கூடுதலாக இன்னும் 21 மையங்களை உருவாக்க உள்ளோம். இந்த கல்வி மையங்கள், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

'ஆப்டெக்' நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் வெளிநாடுகளில் உள்ளது. வளர்ந்த நாடுகளை விட, வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் மட்டுமே அதிக கிளைகளை கொண்டுள்ளோம். குறிப்பாக, ரஷ்யா, வியட்நாம், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கல்வி மேம்பாட்டுக்காக கல்வி மையங்களை ஏற்படுத்தியுள்ளோம். மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தை, விரைவில் இரண்டில் ஒரு பங்காக மாற்ற வெளிநாடுகளில் கிளைகளை துவக்க உள்ளோம்.இவ்வாறு, நினந்த் கார்பே கூறினார்.

-நமது நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us