"படை அனுப்பும் திட்டம் இல்லை' : பதட்டத்தை தணிக்கிறது அமெரிக்கா
"படை அனுப்பும் திட்டம் இல்லை' : பதட்டத்தை தணிக்கிறது அமெரிக்கா
"படை அனுப்பும் திட்டம் இல்லை' : பதட்டத்தை தணிக்கிறது அமெரிக்கா
ADDED : அக் 01, 2011 11:34 PM

வாஷிங்டன்: ஹக்கானி குழுவை மையமாக வைத்து இரு தரப்புக்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தைத் தணிக்கும் வகையில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்து, பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த செப்., 13ம் தேதி, ஆப்கன் தலைநகர் காபூலில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், ஹக்கானி குழுவுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக அமெரிக்கா கருதியது. அதோடு, பாகிஸ்தானின் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் ஹக்கானி குழு செயல்படுவதாக கூறி வரும் அமெரிக்கா, அக்குழுவுடனான தொடர்பை ஐ.எஸ்.ஐ., துண்டித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து, கடந்த இரு வாரங்களாக இரு தரப்பிலும் வார்த்தைப் போர் தொடர்ந்தது. இந்நிலையில், இருதரப்பு பதட்டத்தைத் தணிக்கும் வகையில், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகவல் பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில், 'அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிசை கைது செய்தது, ஒசாமா பின்லாடன் கொலை ஆகியவை இருதரப்பு உறவையும் பாதித்துள்ளன. அதேநேரம், தளபதி மைக் முல்லன், பாக்., பழங்குடிப் பகுதிகள் பயங்கரவாதிகளின் சொர்க்கமாகத் திகழ்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். பாகிஸ்தான் தான் இப்பிரச்னை குறித்து கவனமாகச் செயல்பட வேண்டும்' என்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி நேற்று அளித்த பேட்டியில், 'இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும்படி காஷ்மீரில் பயங்கரவாதிகளை பாக்., தூண்டி வருகிறது. இது மிகப் பெரிய தவறு என அமெரிக்கா, பாக்.,கிடம் சுட்டிக் காட்டியுள்ளது' என்றார்.
அதேநேரம், அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'தெற்காசிய மண்டலத்தில் அமைதியும், ஆப்கானிஸ்தான் பிரச்னைக்குத் தீர்வும் வேண்டுமானால், அதில் பாகிஸ்தானின் பங்களிப்பு மிக முக்கியம். அந்நாட்டை விடுத்து இப்பிரச்னைகளுக்குத் தீர்வு கிடையாது' என்றார்.
அமெரிக்காவின் தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று இஸ்லாமாபாத்தில் பேசிய அதிபர் ஆசிப் அலி சர்தாரி, 'அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள், பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்துவிட்டன. இதனால், பயங்கரவாதிகள் தான் பயன் பெறுவர்' என்றார்.


