Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தமிழகத்தில் "தட்டு தடுமாறும்' கால்நடைத் துறை குறையும் கால்நடைகளால் வெண்மை புரட்சி பாதிப்பு

தமிழகத்தில் "தட்டு தடுமாறும்' கால்நடைத் துறை குறையும் கால்நடைகளால் வெண்மை புரட்சி பாதிப்பு

தமிழகத்தில் "தட்டு தடுமாறும்' கால்நடைத் துறை குறையும் கால்நடைகளால் வெண்மை புரட்சி பாதிப்பு

தமிழகத்தில் "தட்டு தடுமாறும்' கால்நடைத் துறை குறையும் கால்நடைகளால் வெண்மை புரட்சி பாதிப்பு

ADDED : செப் 08, 2011 01:08 AM


Google News

திருநெல்வேலி : தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளின் காரணமாக கால்நடைத் துறை தட்டு தடுமாறி காணப்படுகிறது.

குறையும் கால்நடைகளால் பால் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் ஏழை மக்களுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். வரும் 15ம் தேதி முதல் இத்திட்டம் ஆரம்பமாகிறது. ஆனால் கால்நடைத் துறையில் பல்வேறு பிரச்னைகளின் காரணமாக இத்துறை தட்டு தடுமாறி காணப்படுகிறது. கால்நடைத் துறையின் பிரச்னை தொடர்பான 'ஸ்கேன்' ரிப்போர்ட்: குறைந்து வரும் கால்நடைகள்: ஒரு காலத்தில் வெண்மை புரட்சி, இறைச்சி உற்பத்தி, முட்டை உற்பத்தியில் தமிழகம் சிறப்பான இடம் வகித்து. ஆனால் கால்நடை வளர்ப்போர் பல சிரமங்களை சந்தித்து வருவதால் இத்தொழிலை கைவிட்டு கால்நடைகளை விற்க தொடங்கினர். இதனால் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

கலப்பின பசுக்கள்: >தற்போது பல கிராமங்களில் கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படாததால் ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பல பார்வை கிளை நிலையங்களும் தற்போது செயல்படாததால் கால்நடைகளை வளர்ப்போர் கால்நடைகளுக்கு மருத்துவம் மற்றும் கருவூட்டல் உதவி பெற நீண்ட தூரம் கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். போதுமான கிளை நிலையங்கள் இருந்தால் நாட்டின பசுக்கள் அனைத்தும் அயலின விந்துக்கள் மூலம் கலப்பின பசுக்களாக மாற்றம் பெறும். போதுமான களப் பணியாளர்கள் இன்றி கால்நடை தொழிலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறம், விவசாயத்தை அடிப்படையாக கால்நடை வளர்ப்பு கொண்டதால் இப்பகுதிகளில் கிளை நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.



புதிய கிளை நிலையங்கள் தேவை: கால்நடை வளர்ப்போருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறைந்த செலவில் கிளை நிலையங்கள் மூலமாக அரசால் செய்ய முடியும். உயர் தொழில் நுட்பமும், உயர் மருத்துவமும் கிராமப்புற கால்நடை வளர்ப்போருக்கு பலனளிக்கவில்லை. எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் புதிய கிளை நிலையங்களையும், கால்நடை ஆய்வாளர் பயிற்சியையும் உடனடியாக தொடங்கினால் மட்டுமே தமிழக முதல்வரின் ஆடு, மாடு வழங்கும் திட்டம் உரிய சிறப்பை பெறும். தமிழகம் முழுவதும் 385 பஞ்.,யூனியன்களிலும், 385 பார்வை நிலையங்கள் கட்டட வசதியோடு இருந்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. 2,126 கிளை நிலையங்களில் பார்வை கிளை நிலைய கட்டடங்களும் எந்தவித பயனும் இல்லாமல் உள்ளது. ஒரு கால்நடை மருந்தகம் தொடங்க அரசுக்கு ஆகும் செலவில் சுமார் 10 கிளை நிலையங்களை தொடங்க முடியும்.



பால் உற்பத்தியில் முதலிடம்: கால்நடை வளர்ப்போருக்கு அடிப்படை தேவையான செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தீவன பயிர் வளர்ப்பு, நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற தேவைகளை கிளை நிலையங்கள் நிறைவேற்ற முடியும். எனவே, புதிய கிளை நிலையங்களை தோற்றுவித்தால் கால்நடை வளர்ப்பில் தமிழகம் புத்துணர்ச்சி பெற்று பால் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கும்.



தினமும் ரூ.2 சம்பளம்:>கால்நடை பராமரிப்பு துறையில் 1,500க்கு மேற்பட்ட கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு பல கிளை நிலையங்களில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிபுரிந்து வந்தனர். ஆனால் ஆட்குறைப்பை காரணம் காட்டி இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கிளை நிலையங்களை சுத்தம் செய்யவும், கால்நடைகளை பிடிப்பதற்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பலர் நியமனம் செய்யப்பட்டனர். இப்பணியாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் 2 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. சில இடங்களில் பணியாளர்கள் பணிக்கு வந்த நாளுக்கு மட்டுமே இந்த சம்பளம் வழங்கப்படுவது கொடுமையிலும் கொடுமை. இந்த குறைவான தொகைக்கு யாரும் முன்வராத காரணத்தால் கால்நடை கிளை நிலையங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



நியாயமற்ற நியமனம்: >கால்நடை பராமரிப்பு துறையில் 2ம் நிலை பணியிடமான கால்நடை மருத்துவ கிளை நிலையங்களில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் கடந்த ஆட்சியில் பட்டதாரிகள் நியமனம் செயயப்பட்டனர். இது நியாயமற்ற செயலாகும் என்று அலுவலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எந்த ஒரு மருத்துவ பட்டதாரியும் வேலைவாய்ப்பிற்காக செவிலியர், மருந்தாளுனர் பணியிடங்களையோ அல்லது எந்தவொரு இன்ஜினியரிங் பட்டதாரியும் பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்ப முடித்து பணியாற்றுவோர் இடங்களில் நியமனம் வேண்டுவதில்லை.



வெண்மை புரட்சியில் தமிழகம்: கடந்த காலங்களில் கால்நடை மேம்பாட்டு முனைப்பு திட்டம், கேந்திர கிராம திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் கால்நடை ஆய்வாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால்தான் வெண்மை புரட்சியில் தமிழகம் சிறப்பான இடத்தை பெற்றது. களப் பணியாளர்களான கால்நடை ஆய்வாளர்களின் முழுமையான செயல்பாட்டின் மூலம்தான் அரசின் திட்டங்கள் ஏழை எளிய விவசாயிகளை சென்றடையும். களப் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதிகாரிகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள திட்டங்கள் எதிர்பார்க்கும் பலனை தராது. எனவே, கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் கால்நடை ஆய்வாளர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஆட்சியில் நியாயமற்ற முறையில் செயல்படுத்தப்பட்ட அரசாணை 64ஐ ரத்து செய்ய வேண்டும். கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியிடங்களை வழங்காமல் அவர்களின் கல்வித் தகுதிக்கு குறைவான கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டாம்.



ஆபத்து ஈட்டுப்படி: >கால்நடை மருந்தகங்களில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு மட்டும் மாதம் தோறும் ஆபத்து ஈட்டுப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதே பணிகளை செய்யும் கால்நடை ஆய்வாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படவில்லை. எனவே, இவர்களுக்கும் ஆபத்து ஈட்டுப்படி வழங்க வேண்டும். பதவி உயர்வு வாய்ப்புகள்: கால்நடைத் துறையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு கால்நடை மருத்துவர், உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர், இயக்குனர் என பல்வேறு கட்ட பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளன.

கால்நடை ஆய்வாளரை விட குறைவான கல்வித் தகுதி கொண்ட அமைச்சு பணியாளர்களுக்கு உதவியாளர், கண்காணிப்பாளர், மேலாளர், நிர்வாக அலுவலர், துணை இயக்குனர் என பல கட்ட பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கால்நடை ஆய்வாளர்களுக்கு மட்டும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் என்ற ஒரே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உதவி இயக்குனர் அலுவலகத்திலும் இப்பதவிக்கு அடுத்த கட்டமான தொழில் நுட்ப பதவி (நேர்முக உதவியாளர் ) பணியிடம தற்போது காலியாக உள்ளது. இதனை தர உயர்வு செய்து கால்நடை வளர்ச்சி அலுவலர் என்ற பதவியை உருவாக்கி கால்நடை ஆய்வாளர்களுக்கு வழங்க வேண்டும்.



கால்நடை ஆய்வாளர் நிலை 2ல் இருந்து நிலை 1 பதவி உயர்வு பெறுவதற்கு 8 ஆண்டுகள் என்பதை மாற்றி 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் பதவி இல்லாத விடுபட்ட 52 கால்நடை ஆஸ்பத்திரிகளில் அப்பதவியை உருவாக்குவதுடன் பன்முக மருத்துவமனை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களில் இப்பதவியை தர உயர்வு செய்ய வேண்டும். பெண் ஊழியர்களுக்கு வசதி: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் பல்வேறு பட்ட, பட்டய வகுப்புகளை நடத்த வேண்டும். முன்பு இருந்தது போல் கால்நடை ஆய்வாளர் பயிற்சியை மருந்தியல் தொடர்பான பாடத்துடன் நடத்த வேண்டும். கால்நடைத் துறையில் கிளை அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மேலங்கி வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் பிளாட்களாக மாறி வருவதை தடுக்க வேண்டும். இலவச ஆடு, மாடுகள் தவிர அனைவருக்கும் எளிதான பாங்க் கடன் வசதி, சலுகை விலையில் தீவன பொருட்கள், கால்நடைகளுக்கு போதுமான இட வசதி போன்றவற்றை செய்ய வேண்டும். பல்வேறு குறைபாடுகளை தீர்ப்பதின் மூலம் கால்நடைத் துறை தட்டுத் தடுமாறாமல் வீறு நடை போட்டு எதிர்பார்க்கும் சேவைகளை ஏழை விவசாயிகளுக்கு அளிப்பதோடு மட்டுமல்லாது வெண்மை புரட்சியையும் ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாளை (9ம் தேதி) சட்டசபையில் நடக்கும் கால்நடைத் துறை மானிய கோரிக்கையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர், அதிகாரிகள் விரும்புகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us