அமெரிக்க அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் விசா
அமெரிக்க அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் விசா
அமெரிக்க அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் விசா
ADDED : ஜூலை 19, 2011 07:11 PM
வாஷிங்டன்: பாகிஸ்தானில் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ள, அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள், 87 பேருக்கு அந்நாட்டு அரசு விசா வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒசாமா பின் லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து, அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டிற்கான ராணுவ உதவியில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா நிறுத்தியது. இதையடுத்து, அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமத் சுஜா பாஷா, அந்நாட்டின் புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், புலனாய்வு ரகசியங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் தங்களது வழக்கமான பணிகளைத் துவக்க, 87 அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கு இஸ்லாமாபாத் விசா வழங்கியுள்ளது. மேலும், அபோதாபாத்தில் ஒசாமா பின் லாடன் தங்கியிருந்த போது, அவரது குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ., அடையாளத்திற்கான ரத்தம் எடுக்க, தடுப்பூசி முகாம் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் டாக்டர் ஷகில் அபிரிதியை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


