மகனிடம் இருந்து தந்தைக்கு பாதுகாப்பு : எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மகனிடம் இருந்து தந்தைக்கு பாதுகாப்பு : எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மகனிடம் இருந்து தந்தைக்கு பாதுகாப்பு : எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஜூலை 24, 2011 10:53 PM
மதுரை : நாகர்கோவிலில், மகனிடம் இருந்து பாதுகாப்பு தரக்கோரிய தந்தையின் மனு மீது விசாரணை நடத்தும்படி, கன்னியாகுமரி போலீஸ் எஸ்.பி.,க்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
நாகர்கோவில் நேசமணி நகரை சேர்ந்த ரோபி, 70, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கு மனைவி, மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன் அனித்தர் ஆல்வின் வழக்கறிஞராக உள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து கணவரிடம் உள்ளார். மகனுக்கும் திருமணம் செய்து வைத்தேன். அவருக்கு 30 கோடி ரூபாய் சொத்து கொடுத்துள்ளேன். எனினும், எனக்கும், என் மனைவி, மகளுக்காக வைத்திருக்கும் சொத்துக்களைக் கேட்டு மகனும், மருமகள் சுகன்யாவும் எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து ஆவணங்கள், பொருட்களை அள்ளிச் செல்கின்றனர். உயிர் வாழ பயமாக இருக்கிறது. நேசமணிநகர் போலீசாரிடம் புகார் அளித்தும் பயனில்லை. மகன், மருமகளிடம் இருந்து எங்களைக் காக்க வேண்டும். வீட்டிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, மனுவில் கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்த வேண்டும். பெற்றோர் முதியோர் நல பராமரிப்பு சட்டப்படி, மனுதாரருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து, ஜூலை 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கன்னியாகுமரி போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.


