ADDED : ஜூலை 28, 2011 01:48 AM
சிவகிரி : சமச்சீர் கல்வி முறையை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்திட வேண்டி தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாசுதேவநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.முழுமையான சமச்சீர் கல்வி முறையை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும்.
6வது ஊதிய மாற்ற குறைபாடுகளை களைந்திட வேண்டும். ஒழிவு மறைவற்ற ஆசிரியர் கலந்தாய்வு முறையை அமல்படுத்த வேண்டும். மொத்த பணிக்கால அடிப்படையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உட்பட போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாசுதேவநல்லூர் வட்டார ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி புளியங்குடி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வாசு., உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாசு., வட்டார தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெகதீசன், புளியங்குடி நகர தலைவர் முத்தையாபாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி, தலைவர் சந்திரன், புளியங்குடி செயலாளர் ஆறுமுகவேலு பேசினர். பொருளாளர் முருகையா நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


