ADDED : ஆக 28, 2011 12:33 AM
மேட்டுப்பாளையம் : ஊட்டி மலை ரயில் இன்ஜின் மோதி, மிகவும் பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது.மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், 1886ம் ஆண்டு கட்டப்பட்ட இரண்டு பெரிய செட்டுகள் உள்ளன.
ஒரு செட்டில் ஊட்டி மலை ரயில் இன்ஜினும், மற்றொன்றில் ரயில் பெட்டிகளும் நிறுத்தி பழுது நீக்கப்படுகின்றன. இக்கட்டடம் பெரிய கற்களை வைத்து, சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ரிப்பேர் சரி செய்து இன்ஜினை மேட்டுப்பாளையம் கொண்டு வந்தனர். இந்த இன்ஜினை ஸ்டீம் லோகோ செட்டில் நிறுத்தி கடந்த நான்கு நாட்களாக, மலை மீது ரயில் பெட்டிகளை தள்ளிச் செல்லும் அளவுக்கு, நீராவி தாங்கி நிற்கிறதா என்று ஆய்வு செய்தனர். நேற்று காலை 6.30 மணிக்கு இந்த இன்ஜினை செட்டிலிருந்து மற்றொரு இன்ஜின் வெளியே இழுத்து வந்தது. அப்போது, இன்ஜின் மேல்பகுதி கட்டடத்தின் வளைவு பகுதியை இடித்துக் கொண்டு வெளியே வந்தது. இதில் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலும் உடைந்தது. அதனால், அதே இடத்தில் இன்ஜின் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கூறுகையில்,'திருச்சிலிருந்து கொண்டு வந்த இந்த இன்ஜினை, லோகோ செட்டில் நிறுத்தி, கடந்த நான்கு நாட்களாக பரிசோதனை செய்து வந்தோம். இன்று (நேற்று) காலை வெள்ளோட்டம் விட, செட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தோம். அப்போது, இன்ஜினின் மேல்பகுதி பட்டு, சுவர் இடிந்து விழுந்தது. செட்டின் உள்ளே இன்ஜினை கொண்டுசென்ற போது, சுவரில் மோதவில்லை. அதே இன்ஜினை வெளியே எடுத்து வந்த போது சுவரில் மோதி இடிந்துள்ளது. இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை; ஆய்வுக்கு பிறகு தான் முழுமையான காரணம் கூற முடியும்,' என்றனர்


