கேபிள் "டிவி" விளம்பரங்களுக்கு வரி வசூல் : காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை
கேபிள் "டிவி" விளம்பரங்களுக்கு வரி வசூல் : காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை
கேபிள் "டிவி" விளம்பரங்களுக்கு வரி வசூல் : காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை

சென்னை : ''சுவர் விளம்பரங்கள், கேபிள் 'டிவி' விளம்பரங்கள் போன்றவற்றுக்கு என வரி வசூல் செய்ய, தனி வாரியம் அமைக்க வேண்டும்,'' என்று காங்கிரஸ் உறுப்பினர், சட்டசபையில் வலியுறுத்தினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கையின் மீது, சட்டசபையில் நடந்த விவாதம்: செ.கு.தமிழரசன் - இந்திய குடியரசு கட்சி: சென்னை நகரில், 26 சதவீதம் ஆதிதிராவிடர்கள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில், சென்னை மேயராக ஆதிதிராவிடர் யாரும் பதவிக்கு வரவில்லை. 10 ஆண்டுக்கு ஒரு முறை, உள்ளாட்சி பதவிகளில் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென விதி உள்ளது. எனவே, இந்த முறை ஆதிதிராவிடர் ஒருவரை மேயராக ஆக்க வேண்டும்.
விஜயதாரணி - காங்கிரஸ்: உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான அளவு பணியிடம் ஒதுக்க வேண்டும். தமிழகம் முழுக்க, சுவர் விளம்பரம், கேபிள் 'டிவி' விளம்பரத்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பதில்லை. இவற்றை முறைப்படுத்தினால், 5,000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, பொதுவான விளம்பர வசூல் வாரியம் அமைக்க வேண்டும். இந்த நிதியை, உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்தளித்து, அவற்றின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
ஏ.கே.செல்வராஜ் - அ.தி.மு.க: வீரபாண்டி ஆறுமுகம் கைதானதைத் தொடர்ந்து, ஆடிப்பெருக்கு விழாவை சேலம் மக்கள் மறந்து, நரகாசுரனை அழித்த தீபாவளியாக கொண்டாடி மகிழ்கின்றனர். உள்ளாட்சிகளுக்கு, 2009-10ல் 10 சதவீதம் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, 6,509 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மோகன்ராஜ் - தே.மு.தி.க: மாநில அரசின் திட்டங்களை கண்காணித்து, அவற்றை சிறப்பாக நிறைவேற்ற, எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். முந்தைய அரசு, இலவச வீடுகள் கட்டித் தருவதாக, 20 லட்சம் ஏழைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கியது. இதை நம்பி, தங்கள் குடிசைகளை இடித்துவிட்டு, தற்போது அந்த மக்கள் நடுத்தெருவில் உள்ளனர். உள்ளாட்சி பதவிகளுக்கு மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


