ADDED : ஆக 11, 2011 12:23 AM
புதுடில்லி: 'ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க, கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.37 ஆயிரம் கோடிக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என, ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2004-11ம் ஆண்டுகளில் பல்வேறு விதமான ராணுவ தளவாடங்கள், ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், சி130 ஜே விமானம், வி.வி.ஐ.பி., பயணிப்பதற்கான போயிங் விமானம் ஆகியவையும் அடங்கும். 10சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானம் மற்றும் அதனுடன் இணைந்த கருவிகள் வாங்க, கடந்த ஜூன் 14ம் தேதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி. இந்த விமானம், 2013ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.


