Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் அருணகிரிநாதர் ஜெயந்தி விழா துவக்கம்

வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் அருணகிரிநாதர் ஜெயந்தி விழா துவக்கம்

வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் அருணகிரிநாதர் ஜெயந்தி விழா துவக்கம்

வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் அருணகிரிநாதர் ஜெயந்தி விழா துவக்கம்

ADDED : ஜூலை 14, 2011 12:22 AM


Google News

திருச்சி: திருச்சி வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் அவதார திருநாளான நேற்று ஜெயந்தி விழாயையொட்டி, மகா அபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, திருப்புகழ் பாட இயலாமல், தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற அருணகிரிநாதரை, முருகப்பெருமான் தடுத்து, 'வயலூருக்கு வா' என்று அழைத்தார். வயலூர் வந்த அருணகிரிநாதரின் நாக்கில் வேலினால் ஓம் என்று எழுதி, அவருக்குள் தேங்கி கிடந்த தெய்வ நலத்தை திறந்துவிட்டு, 'தம்மையும் இந்த ஊரையும் பற்றியும் பாடு' என்று அருள்பாலித்தார். இச்செய்தியை அருணகிரிநாதர், 'செய்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமோடு செப்பன எனக்கருள் கை மறவேனே' என்று வயலூர் குறித்து திருப்புகழில் புகழ்ந்து பாடியுள்ளார். முருகப்பெருமான் அருள்பெற்ற அருணகிரிநாதருக்கு, வயலூர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. காலை 11 மணிக்கு, சுப்ரமணிய ஸ்வாமி, அருணகிரிநாதருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபராதனை நடந்தது. முன்னதாக, அபிஷேகத்துக்காக, பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர். மாலை ஐந்து மணிக்கு, சிறப்பு நாதஸ்வர இன்னிசையும், இரவு ஏழு மணிக்கு, சென்னை வடபழனி செல்வி.நிரஞ்சனா, செல்வி.ஸ்ரீநித்யாவின் திருப்புகழ் இன்னிசை நாட்டிய விழாவும் நடந்தது. இரவு ஒன்பது மணிக்கு, சுப்ரமணிய ஸ்வாமி, அருணகிரிநாதர் திருவீதியுலா வந்தனர். இன்று (14ம் தேதி) மாலை ஐந்து மணிக்கு, சிறப்பு மங்கள இசையும், இரவு ஏழு மணிக்கு குமாரவயலூர் திருஞானசம்பந்தம் ஓதுவார் தலைமையிலான தேவாரக்குழுவினரின் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us