PUBLISHED ON : ஜூலை 24, 2011 12:00 AM
புற்றுநோயை ஏற்படுத்தும் இனிப்புகள்:தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் இனிப்பு வகைகளை அதிகம் உண்கின்றனர்.
அவர்களின் அன்றாட உணவு வகைகளில், இனிப்பு முக்கிய இடம் பெறுகிறது.உத்தரப்பிரதேச கிராமங்களில் காலை உணவாக வெறும் ஜிலேபி மட்டுமே உள்ளது. குஜராத்தில் சாம்பார், பொரியல், தயிர் என அனைத்திலுமே இனிப்பை சேர்ப்பர்.தென் மாநில விசேஷங்கள், சமயப் பண்டிகை நாட்களில் மட்டுமே இனிப்பை உண்பர். எனினும் ஒட்டுமொத்த இந்திய இனிப்புகள் ஐரோப்பிய இனிப்பு உணவு வகைகளை விட, கூடுதல் இனிப்புடன் தான் உள்ளன. இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது அனைவரும் அறிந்தது தான். தற்போது அதிக இனிப்புகளினால், கணையப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன என தெரிய வந்தது. சர்க்கரை, தேன், ஜாம், வெல்லம் உள்ளிட்ட இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதால் கணையப் புற்றுநோய் ஏற்படும்.
தகவல் சுரங்கம்
சீசன் பழங்கள்:தமிழகத்தில், பலாப்பழ சீசன் நடைபெறுகிறது. தகுந்த விலை இல்லை என்பதால் கொல்லி மலை போன்ற பகுதிகளில், பலாப்பழங்கள் பறிக்கப் படாமல் அப்படியே விடப்படுகிறது. கேரளாவில் பலாப்பழம் பாயாசம், கொழுக்கட்டை போன்றவற்றில் பயன்படுத்தப் படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் பலாப்பழம் சமையலில் பயன்படுத்தப்படுவது இல்லை. எனவே அதிகமாக உற்பத்தியாகும் நேரங்களில் நல்ல விலை கிடைக்காமல் போய் விடுகிறது. தமிழகத்தில் செட்டிநாட்டுப் பகுதிகளில் பலாப் பிஞ்சை சமையலில் பயன்படுத்துவர்.பலாப்பழத்தின் மேல், பல் போன்று கூர்மையாக இருப்பதால், பலாப்பழம் என்று காரணப்பெயர் சூட்டப்பட்டதாம். பழங்காலத்தில் தச்சு வேலைகளுக்கு பலா மரமே பயன்படுத்தப் பட்டதால் தான், பலகை என்ற சொல் உருவானதாம். வட மொழியில் இதனை 'பனசம்' என்று கூறுவர்.


