தமிழக எல்லையில் மணல் கொள்ளை : வெளிமாநில விற்பனையால் அதிக லாபம்
தமிழக எல்லையில் மணல் கொள்ளை : வெளிமாநில விற்பனையால் அதிக லாபம்
தமிழக எல்லையில் மணல் கொள்ளை : வெளிமாநில விற்பனையால் அதிக லாபம்

ஓசூர் : ஓசூர் அருகே, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கூட்டணி அமைத்து, தென்பெண்ணை ஆற்றுப் படுகையிலும், அரசு புறம்போக்கு நிலத்திலும், பகிரங்கமாக மணல் குவாரி அமைத்து, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு மணல் கடத்துகின்றனர்.
தென்பெண்ணை ஆறு செல்லும் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, சூளகிரி பகுதியில் காணப்படும் வண்டல் மண்ணும், வளமான செம்மண்ணும் விலை மதிப்பற்றதாக உள்ளது. கடந்த காலத்தில் மார்க்கண்டேயன் நதி, சின்னாறு ஆற்றுப் படுகையில் நடந்த மணல் கொள்ளையால், தற்போது அந்த ஆற்றுப் படுகை முழுவதும் பள்ளத்தாக்காக காணப்படுகின்றன. அதனால், மணல் கொள்ளையர்கள் தென்பெண்ணை ஆறு, சனத்குமார் நதி ஆற்றுப் படுகைகளை குறி வைத்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் பேரண்டப்பள்ளியை அடுத்த புக்காசாகரம் செம்பட்டி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி உள்ளிட்ட ஐந்து இடங்களில், இரு மாதமாக மணல் கொள்ளையர்கள் முகாமிட்டு, இயற்கையான ஆற்று மணலையும், ராட்சத மிஷின்கள் மூலம் செயற்கை மணல் (பில்டர் மணல்) தயாரித்தும் கர்நாடகா, ஆந்திராவுக்கு அனுப்பி வருகின்றனர். இங்கு, மணல் ஒரு லோடு, 18 ஆயிரம் ரூபாய் வீதம், தினமும் பல கோடி ரூபாய்க்கு மணலை கடத்துகின்றனர்.
திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி தென்பெண்ணை ஆற்றுப் படுகை வனப்பகுதியில், மணல் கொள்ளையர்கள் மணல் குவாரி அமைத்துள்ளனர். மணல் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காக, குடிசைகள் அமைத்து நிரந்தரமாக தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், நாள் முழுவதும் மணலை வெட்டி எடுத்து, மலை போல் குவித்து வைக்கின்றனர்.
அவற்றை, மணல் கொள்ளையர்கள், லாரிகள் மூலம் கர்நாடகாவுக்கு ஓசூர் வழியாகவும், ஆணைக்கல் வழியாகவும் கடத்துகின்றனர். செம்மப்பட்டி மலையடிவாரப் பகுதியில் மணல் குவாரி அமைத்து, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடிசை அமைத்து, மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மணல் கடத்தல் தொழிலில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆதரவுடன், மணல் வெட்டுபவர்கள், பில்டர் மணல் உற்பத்தியாளர்கள், இன்பார்மர்கள், அரசு அதிகாரிகளின் ஜீப் டிரைவர்கள் மற்றும் லாரிகள் மூலம் மணலை வெளிமாநிலங்களுக்கு கடத்துபவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
அரசு அலுவலகங்களில் நிரந்தரமாக முகாமிட்டுள்ள இன்பார்மர்கள், அதிகாரிகள் திடீர் ஆய்வுக்கு செல்வதை கண்காணித்து, மணல் கொள்ளையர்களுக்கு உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்கின்றனர்.
போலீசார், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் பெயரளவுக்கு சில லாரிகளை பிடித்து கணக்கு காட்டுவதால், மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் உள்ள மண் வளத்துக்கு, பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


