வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி : சத்துணவு பணியாளர் சங்க தலைவர் மீது டி.ஜி.பி.,யிடம் புகார்
வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி : சத்துணவு பணியாளர் சங்க தலைவர் மீது டி.ஜி.பி.,யிடம் புகார்
வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி : சத்துணவு பணியாளர் சங்க தலைவர் மீது டி.ஜி.பி.,யிடம் புகார்
ADDED : செப் 07, 2011 11:30 PM
சென்னை: பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும், பணி மாறுதல் வாங்கித் தருவதாகவும் கூறி, 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, சத்துணவுப் பணியாளர் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஜி.பி., அலுவலகத்தில், பாதிக்கப்பட்டோர் மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம், சத்திரம் கருப்பூரைச் சேர்ந்தவர் சுதாகர், 44; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கலையரசி, நாகை மாவட்டம் செம்பனார் கோவிலில், சத்துணவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளரும், சேப்பாக்கம், பெல்ஸ் சாலையில் உள்ள சத்துணவுப் பணியாளர்கள் சங்க தலைவருமான வரதராஜன், ஐந்தாண்டுகளுக்கு முன், சுதாகருக்கு அறிமுகமாகியுள்ளார். வரதராஜனின் மனைவி அல்லி, புழல் ஒன்றியத்தில் கிராம சேவிகாவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வரதராஜன் மற்றும் அல்லி இருவரும் இணைந்து, சத்துணவு அமைப்பாளர், தலைமைச் செயலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் , ரயில்வே உள்ளிட்ட துறைகளில் பணி வாய்ப்பு வாங்கித் தருவதாக, 76 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை வாங்கி ஏமாற்றி விட்டதாக, டி.ஜி.பி.,யிடம், சுதாகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், நேற்று புகார் அளித்தனர். அப்போது, சுதாகர் கூறியதாவது:
என் மனைவி சத்துணவு அமைப்பாளராக இருப்பதால், அவர் மூலம் தான் வரதராஜன் அறிமுகமானார். சத்துணவுச் சுடர் என்ற பத்திரிகை நடத்தி வருவதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர்கள் மற்றும் பல துறை உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளதாகக் கூறி, எங்களை நம்ப வைத்தார். அரசு நிலம் பெற்றுத் தருவதாகவும், என் டிரைவர் பணியை நிரந்தரமாக்குவதாகவும், எங்கள் மகனுக்கு இன்சூரன்ஸ் கட்டுவதாகவும் கூறி, என்னிடம் மட்டும் 13.50 லட்ச ரூபாய் ஏமாற்றினார். மேலும், என் மூலம் மேலும் 76 பேரிடம், 2 கோடி ரூபாயக்கு மேல் அவர் பெற்றுள்ளார். ஆனால், அவர் கூறிய எதையும் செய்து தரவில்லை. பணம் கொடுக்கும் போது, அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அறிமுகப்படுத்தியதுடன், இந்த பணம் அவருக்குத் தான் செல்கிறது என்றும் கூறினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தன்னால் வேலை வாங்கித் தரமுடியாது என்றும், கொடுத்த பணத்தில் பாதியை பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார். மீறி கேட்டால் மிரட்டல் விடுத்தார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தைக் கொடுத்து ஏமார்ந்த எங்களுக்கு 2 கோடி ரூபாயையும் மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சுதாகருடன், கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த, நாகூரம்மாள், மயிலாடுதுறையைச் சேர்ந்த லதா, வேலூர் மாவட்டம் ஓடுகத்தூரைச் சேர்ந்த சந்தோஷம், இடைப்பஞ்சாயத்து கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி மற்றும் பிரசாத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரும் தனித்தனியாக மனு அளித்தனர்.


