/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் முடிந்தும் பணி விதியில் இடம் இல்லாமல் தவிக்கிறோம்பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் முடிந்தும் பணி விதியில் இடம் இல்லாமல் தவிக்கிறோம்
பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் முடிந்தும் பணி விதியில் இடம் இல்லாமல் தவிக்கிறோம்
பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் முடிந்தும் பணி விதியில் இடம் இல்லாமல் தவிக்கிறோம்
பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் முடிந்தும் பணி விதியில் இடம் இல்லாமல் தவிக்கிறோம்
ADDED : செப் 03, 2011 11:26 PM
தூத்துக்குடி : தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் ஆகியும் பணி விதியில் இடம் இல்லாமல் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அரசு இவர்கள் விஷயத்தில் கருணை காட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் தற்போது தனி மனிதர்களின் பொருளாதார வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் கண்டு வருவதை கண் கூடாக காண்கிறோம். அரசின் முழு ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிலை இல்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்கள் மிக அதிகமாக இருந்தனர். அவர்களுக்கு போதிய கல்வி அறிவும் இல்லாமல், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலும் இருந்தனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பெண் சமுதாய முன்னேற்றம் மற்றும் அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக 1998ம் ஆண்டு மாநகராட்சி, நகராட்சிகளில் சமுதாய அமைப்பாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கானவர்கள் நியமிக்கப்பட்டனர். 2006ம் ஆண்டு அரசாணை எண் 128ன் படி இவர்களுக்கு இளநிலை உதவியாளர்கள் ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயம் இவர்களது பணியினை மாநகராட்சி, நகராட்சி பணி விதிகளில் கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக முதுகலை பட்டம் பெற்று 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களின் பணி நிலை நிச்சயமற்றதாக தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுதாய அமைப்பாளர்களின் கல்வித்தகுதி பட்டப்படிப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது சமுதாய அமைப்பாளர்களாக பணியாற்றி வருகிற பெரும்பான்மையானோர் முதுகலை பட்டதாரிகளாக உள்ளனர்.மாநகராட்சி பணி விதிகளின்படி நேரடி நியமன உதவியாளர்களின் கல்வித்தகுதி பட்டப்படிப்பாகும். நகராட்சி, மாநகராட்சி பணி விதிகளில் உதவியாளர் நிலையில் இவர்களது பணியிடத்தினை உருவாக்கி உதவியாளருக்கான ஊதிய விகிதம் வழங்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் இவர்களை போன்ற சமுதாய அமைப்பாளர்கள் சமுதாய மேம்பாட்டு அலுவலர் என்ற பெயரில் பணியமர்த்தப்பட்டு, பணிநிரந்தரம் செய்யப்பட்டு நகர திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட வறுமை ஒழிப்பு திட்ட அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மனநல காப்பகத்தில் இவர்களை போன்ற பணியினை மேற்கொண்டு வருபவர்கள் சமூக நலப்பணியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிற சமுதாய அமைப்பாளர்களை நகராட்சி, மாநகராட்சி பணி விதிகளில் உதவியாளர் பணியிட நிலையில் 'சமுதாய முன்னேற்ற அலுவலர்' என்ற பெயரில் பணியிடத்தை உருவாக்கி அதற்கான ஊதியத்தை பணியில் சேர்ந்த நாளில் இருந்து வழங்கிடவும், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தினை ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்து கொள்ளவும் உத்தரவிட வேண்டும். திட்ட நிதியில் அலுவல் மற்றும் இதர செலவுகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட 8 சதவீத நிதியில் இருந்து ஊதியம் வழங்குவதால் அரசுக்கு எந்தவிதமான செலவினமும் இல்லை என்றும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தங்கள் விஷயத்தில் கருணை வைத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுதாய அமைப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


