Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/காஷ்மீருக்கு செல்லும் சேலம் கொசு வலைகள்

காஷ்மீருக்கு செல்லும் சேலம் கொசு வலைகள்

காஷ்மீருக்கு செல்லும் சேலம் கொசு வலைகள்

காஷ்மீருக்கு செல்லும் சேலம் கொசு வலைகள்

ADDED : அக் 06, 2011 02:17 AM


Google News
சேலம்: ஆப்பிள் தோட்டம், திராட்சை தோட்டம், மல்பரி செடிகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்புக்கு, சேலத்தில் இருந்து காஷ்மீர், குஜராத், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொசு வலைகள் ஏற்றுமதியாகிறது.

கொசு வலைகள் உற்பத்தியில், கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சிறந்து விளங்குகின்றன. சேலத்தில் தயாரிக்கப்படும் கொசு வலைகள், விவசாய தேவைகளுக்காகவே உருவாக்கப்படுகிறது. 18க்கும் மேற்பட்ட கொசு வலை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

ஹெச்.டி.டி.இ., எனும் குருணையை வேகவைத்து, அதிலிருந்து மெல்லிய இழை தயாரிக்கப்படுகிறது. பின், வைண்டிங் மூலம் நூல் பாபினாக உருவாக்கப்பட்டு, விசைத்தறி மூலம் வலைகளாக தயார் செய்யப்படுகிறது.

உத்திபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், காஷ்மீர், ஒரிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, இவ்வகை கொசு வலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு ஆப்பிள், மல்பரி, திராட்சை, கேரட் உள்ளிட்ட விவசாய பண்ணைகளுக்கும், டீ எஸ்டேட், மீன் பிடிக்கும் வலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மீட்டர் வலை நான்கு ரூபாய் என விற்பனைக்கு கணக்கிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கேற்ற தொழிலாக, சேலம் மாநகர, மாவட்டப்பகுதிகளில் அமைந்துள்ளது. நிலவாரப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில், வீடுகளிலேயே தறிகள் மூலம் கொசு வலை தயாரிக்கப்படுகிறது. 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, இதற்கு கூலியாக வழங்கப்படுகிறது. கொசு வலை நிறுவனங்களில் பணியாற்றுவோர் நாள்தோறும் எட்டு மணி நேர வேலை அடிப்படையில், 100 ரூபாய் வரை பெறுகின்றனர்.

சேலம் லைன்மேட்டில் உள்ள கொசுவலைத் தயாரிப்பு நிறுவன அதிபர் கிருஷ்ணராஜ் கூறியதாவது:

கொசு வலையில், 360 டிசைன்கள் உள்ளன. குருணையை வேகவைத்து அதன் மூலம் நூல் எடுக்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் கலர் சேர்க்கப்படும். ஆண்டு தோறும் தீபாவளிக்கு பின் கொசு வலை தேவை அதிகம் இருக்கும். தமிழகத்தை விட, வட மாநிலங்களில், விவசாயத்துக்கும், மீன்வளத்துக்கும் வாங்கி செல்கின்றனர். 2,000 மீட்டர் கொண்ட ஒரு பேல் விலை, 10 ஆயிரம் ரூபாய் வரை செல்லும். சேலம் மாநகரப் பகுதிகளில், கொசு வலை தொழில் தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்துள்ளது. நெசவுத் தொழிலுக்கு, தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்குவதுபோல், கொசு வலை தயாரிப்பு தொழிலையும் ஊக்குவிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us