ADDED : ஆக 02, 2011 11:58 PM
திருச்சி: திருச்சி அருகே கேரளாவுக்கு கடத்துவதுக்காக பதுக்கி
வைக்கப்பட்டிருந்த 1,540 கிலோ ரேஷன் அரிசியை உணவுப்பொருள் பதுக்கல்
தடுப்புப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதை கடத்த முயன்ற
தம்பதியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலிருந்து
அதிகளவில் ரேஷன் அரிசிகள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக மாவட்ட
கலெக்டருக்கும், உணவுப்பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கும்
அடிக்கடி புகார்கள் வந்தது.இதையடுத்து திருச்சி மாவட்டத்திலிருந்து ரேஷன்
அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவு
பிறப்பித்தார்.
அதன்பேரில் திருச்சி மாவட்ட உணவுப்பொருள் பதுக்கல் தடுப்பு
பிரிவு போலீஸார், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) அர்ச்சுணன்,
தனித்தாசில்தார் சண்முகராஜா கொண்ட பறக்கும் படை
அமைக்கப்பட்டது.உணவுப்பொருள் பதுக்கல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர்
கபிலனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், எஸ்.ஐ., கோசலைராமன் உள்ளிட்ட
போலீஸார் நேற்று முன்தினம் இரவு பெட்டவாய்த்தலை ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள
தமிழரசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.அங்கு 10க்கும் மேற்பட்ட
மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,540 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல்
செய்தனர். இந்த அரிசி ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி
வைக்கப்பட்டிருந்துள்ளது.இதையடுத்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு
கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த தமிழரசனையும், அவரது மனைவி ரத்தினமும்
கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உணவுப்பொருள் பதுக்கல் தடுப்பு
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.