பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் ஆய்வு அதிகாரி வருவதில் காலதாமதம்?
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் ஆய்வு அதிகாரி வருவதில் காலதாமதம்?
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் ஆய்வு அதிகாரி வருவதில் காலதாமதம்?
திருவனந்தபுரம் : பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் குறித்து ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் நியமித்த தேசிய அருங்காட்சியக இயக்குனர் டாக்டர் ஆனந்த்போஸ் வருவது காலதாமதமாகலாம் என, தெரிகிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பாதாள அறைகளில், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை உலகுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த விவரங்கள் தெரிய வந்துள்ளதால், கோவிலுக்கு உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பொக்கிஷங்கள் குறித்து கணக்கெடுத்து மதிப்பிட வசதியாக, தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்த்போஸ் தலைமையில் கமிட்டியை, சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. ஆனால், டாக்டர் ஆனந்த்போசுக்கு இன்னமும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவர் செல்வதற்கு முன்னோடியாக, தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்த்போஸ், இலங்கை தலைநகர் கொழும்பு சென்று, அங்கு புத்தர் சிலைகள் குறித்து சில ஆய்வு மற்றும் விளக்கங்களை அளிக்க உள்ளார். அனேகமாக அங்கு அவர் ஒரு வார காலம் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.
ஆனால், பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் குறித்து மதிப்பீடு செய்து, உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் பட்சத்தில், தன் இலங்கை பயணத்தை ரத்து செய்தல் அல்லது பயணத் திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்படும். இருப்பினும், வெள்ளிக்கிழமை மாலை வரை சுப்ரீம் கோர்ட் நியமன உத்தரவு அவருக்கு கிடைக்காத நிலையில், அவர் இலங்கை பயணத்தை தொடரக்கூடும் என்றே தெரிகிறது. கோர்ட் நியமன உத்தரவு ஓரிரு தினங்களில் அவருக்கு கிடைத்தால், அவர் கமிட்டியின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பார்.


