/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாஜி அரசு கூடுதல் வக்கீல் மீது பார்கவுன்சிலில் புகார் செய்ய நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் திட்டம்மாஜி அரசு கூடுதல் வக்கீல் மீது பார்கவுன்சிலில் புகார் செய்ய நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் திட்டம்
மாஜி அரசு கூடுதல் வக்கீல் மீது பார்கவுன்சிலில் புகார் செய்ய நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் திட்டம்
மாஜி அரசு கூடுதல் வக்கீல் மீது பார்கவுன்சிலில் புகார் செய்ய நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் திட்டம்
மாஜி அரசு கூடுதல் வக்கீல் மீது பார்கவுன்சிலில் புகார் செய்ய நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் திட்டம்
ADDED : ஜூலை 13, 2011 03:29 AM
சங்ககிரி: சங்ககிரி பகுதியில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடிக்கு, உடந்தையாக இருந்த மாஜி அரசு கூடுதல் வக்கீல் மீது,சென்னை பார் கவுன்சிலில் புகார் செய்ய, மாவட்ட நில மோசடி தடுப்புப்பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கல்லூரி சாலை, 3வது தெருவை சேர்ந்த சித்தா டாக்டர் ஜனார்த்தனின் மனைவி யசோதா (55).
ஜனார்த்தனின் அண்ணன் மகன் சரவணன் (40). சேலம் மாநகர் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,யாக உள்ளார். இவர்கள் இருவருக்கும், சொந்தமான, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பள்ளிப்பாளையத்தில் வசிக்கும் உறவினர்கள் வெங்கடாசலம், வரதராஜன், நாகப்பன் ஆகியோர் போலி பத்திரம் தயார் செய்து, அதே ஊரை சேர்ந்த ரியஸ் எஸ்டேட் உரிமையாளருக்கு விற்பனை செய்தனர்.இது தொடர்பாக, சேலம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலம், அவரது இரு தம்பிகளை கைது செய்தனர்.விசாரணையில், மூன்று பேரும் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:யசோதா,சரவணனுக்கு சொந்தமான, 86 சென்ட் நிலத்தை, உறவினரான எங்களுக்கு பெற்று தருவதாக, பள்ளிபாளையத்தை சேர்ந்த, அப்போதைய அரசு கூடுதல் வக்கீல் இளங்கோ ஆசை வார்த்தை கூறினார். அவரது திட்டப்படி, போலி பத்திரம் தயார் செய்யப்பட்டது. அதை வைத்து, சங்ககிரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தற்போது, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போதைய அரசு கூடுதல் வக்கீல் இளங்கோவின் மனைவி சரவணசெல்வியும் வக்கீலாக உள்ளார். அவர் தான், இந்த வழக்கில் ஆஜராகி வந்தார். வழக்கு செலவுக்காக போலி பத்திரத்தை வைத்து, கந்தசாமி பெயருக்கு அக்ரிமென்ட் போட்டு, பெறப்பட்ட, 10 லட்சம் ரூபாயில், எங்களுக்கு, 2 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தனர். மீதமுள்ள, 8 லட்சம் ரூபாயை அப்போதைய அரசு கூடுதல் வக்கீல் இளங்கோ எடுத்து கொண்டார். நாங்கள், நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லை. ஆனால், கிரயம் செய்து கொடுத்து விட்டதாக, எங்களுக்கே தெரியாமல் ஆவணம் தயாரித்து மோசடி நடந்துள்ளது.இவ்வாறு, மூவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.நில மோசடி குறித்து, ஜன.,11ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என, அப்போதைய அரசு கூடுதல் வக்கீல் இளங்கோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு முத்திரை பதித்த தன்னுடைய லெட்டர் பேடில், 'இந்த நிலப்பிரச்னை, சிவில் வழக்கு என்பதால், நீங்கள் விசாரணை நடத்த கூடாது. மீறி நடவடிக்கை எடுத்தால் உங்கள் மீது வழக்கு தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அப்போதைய அரசு கூடுதல் வக்கீல் இளங்கோ மிரட்டியுள்ளார்.ஒரு அரசு கூடுதல் வக்கீல், அரசு முத்திரை பதிக்கப்பட்ட லெட்டர் பேடில், அரசு பணியை தடுக்கும் விதமாக பரிந்துரைத்து, மிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றம் என, போலீஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நில மோசடி தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், நில மோசடி புகார் மனு தூசு தட்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், மாஜி அரசு கூடுதல் வக்கீல் அனுப்பிய மிரட்டல் கடிதம் மீதான நடவடிக்கையிலும் போலீஸார் களம் இறங்கி உள்ளனர். அவர் அனுப்பிய மிரட்டல் கடிதத்தை சென்னை பார்கவுன்சிலுக்கு விரைவில் அனுப்பி வைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதோடு, வழக்கு தொடர்பாக அவர் உள்பட, சங்ககிரி சார்-பதிவாளர் வசந்தா, பத்திர எழுத்தர் சுந்தரம் உள்பட மோசடிக்கு தொடர்புடைய, 14 பேரிடமும் தீவிர விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


