சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்
சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்
சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்
ADDED : ஜூலை 29, 2011 10:12 AM

சென்னை: 'சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிட, அரசு எடுக்கும் நடவடிக்கையால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்.
அரசின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும்,'' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய, 'அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி, உண்மை நிலை என்ன?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், சமச்சீர் கல்விக் குழு தலைவர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் மறைய, அனைவரும் கல்வி பெற வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று சட்டம் பிறப்பித்து விட்டு, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அனுமதிப்பது ஏன்? அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். கல்வித் துறையில் அரசு, அரசியல்வாதிகள் குறுக்கீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்தத் துறை வீழ்ந்து விடும். இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடரவிடுவது நமக்கு நல்லதல்ல. ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல. இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.
மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது: ஒரு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி நடுநிலையாக எழுதுவது என்பது, சாதாரண விஷயமல்ல. இந்தப் புத்தகத்தை மிகவும் தைரியத்துடன், சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். முந்தைய அரசு, இன்றைய அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூறி, மாணவர்கள் பக்கம் நின்று இதை எழுதியுள்ளார். கல்வியில் அரசியல் போராட்டம் கலப்பது புதிதல்ல. ஆனால், எப்போதும் பார்க்காத, மோசமான, பொறுப்பற்ற அவலம் தமிழகத்தில் இன்று நிலவுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். பொதுப் பாடத்திற்குப் பதிலாக ஆறு, ஏழு ஆண்டிற்கு முந்தைய பாடத்திட்டத்தைக் கொண்டு வர, இந்த அரசு முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. இந்த பொதுப் பாடத் திட்டத்தில், ஏதாவது குறை இருந்தால், அதை களைந்து, வருகிற ஆண்டுகளில் சரிசெய்து கொள்ளலாம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையின் முழு விவரம், கல்வியாளர்களுக்குத் தான் தெரியும். தமிழே தெரியாத உறுப்பினர்களை, நிபுணர்களாக குழுவில் நியமித்து, அவர்களுடைய பரிந்துரைகளைக் கூட கோர்ட்டில் கொடுக்காமல், அறிக்கை ஒன்றை இந்த அரசு சமர்ப்பித்துள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல். தரம் பற்றி கூறுவதற்கு, என்.சி.இ.ஆர்.டி.,க்கு தான் உரிமை உள்ளது. அவர்கள் கூட இந்த பொதுப்பாடத் திட்டத்தின் பல பகுதிகளைப் பாராட்டி இருக்கின்றனர். தனியார் பள்ளிகள், தரமான கல்வியைக் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரை ஏமாற்றி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அவர்கள் தரம் என்று குறிப்பிடுவது, பாடச்சுமையை மட்டும் தான். பொதுப்பாடத் திட்டம், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும். பாடத் திட்டத்திலாவது சமத்துவம் வரட்டுமே என்ற நோக்கோடு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற இலக்கை அடைய, கட்டப்பட்ட முதல்படியான பொதுப்பாடத் திட்ட முறையைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட, அனைவருக்கும் கல்விச் சட்டம் பெயரளவில் தான் உள்ளது. அதை செயல்படுத்துவதில், இந்த அரசு ஆர்வம் காட்டலாம். அதை விடுத்து, பொதுப் பாடத்திட்ட முறையைக் கைவிட்டு, அரசு எடுக்கும் நடவடிக்கை, மாணவர்களுக்கு உதவாது. இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும். இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
விழாவில், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், 'ஜி.ஏ., பப்ளிகேஷன்ஸ்' அசோகன் வரவேற்றுப் பேசினர். சமச்சீர் கல்விக் குழு உறுப்பினர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


