ADDED : ஜூலை 26, 2011 12:48 AM
சென்னை : தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
'காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் டைரக்டர் ஸ்ரீதரால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரவிச்சந்திரன்,71. இதயக்கமலம், குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, மாடி வீட்டு மாப்பிள்ளை, அதே கண்கள், அருணாச்சலம், ரமணா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில்,'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில், அவருக்கு கடந்த 19ம் தேதி இரவு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் இருந்ததால், செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றிரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு விமலா என்ற மனைவியும், இரண்டுமகன்களும் உள்ளனர்.