சன், "டிவி' மீதான புகார்களும் விரைவில் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சன், "டிவி' மீதான புகார்களும் விரைவில் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சன், "டிவி' மீதான புகார்களும் விரைவில் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சென்னை : சன், 'பிக்சர்ஸ்' சக்சேனா மீதான புகார்கள் மாற்றத்தை தொடர்ந்து, சன், 'டிவி' மீது நித்யானந்தா சீடர்கள், நடிகை ரஞ்சிதா அளித்த புகார்களும் சி.பி.சி.ஐ.டி., க்கு விரைவில் மாற்றப்பட உள்ளன.
புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சக்சேனா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், புகார்தாரர்கள் மற்றும் சன், 'பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு, மோசடி பணத்தை திரும்பப் பெற்றதால், கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இன்னும் சிலர் புகார் அளித்துள்ளனர். இது தவிர, வெளிமாவட்டங்களிலும் சக்சேனா மீது சில புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்குகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த புகாரும் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, சன், 'டிவி'யில் நித்யானந்தா, ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது தொடர்பாக, சன், 'டிவி' நிர்வாகி கலாநிதி, சக்சேனா உள்ளிட்டவர்கள் மீது, நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவின் சீடர்கள் நித்ய சர்வானந்தா, பிடதி ஆசிரம மேலாளர் நித்ய பிரமானந்தா மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த புகார்கள் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார்களையும் சி.பி.சி.ஐ.டி., க்கு விரைவில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களிலும் சக்சேனா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருப்பதாலும், புகார்களுடன் கொடுக்கப்பட்ட சி.டி.,க்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாலும், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.


