தொழில்நுட்பம் பயன்படுத்தி புலனாய்வு அதிகாரிகளுக்கு சிறப்பு பரிசு
தொழில்நுட்பம் பயன்படுத்தி புலனாய்வு அதிகாரிகளுக்கு சிறப்பு பரிசு
தொழில்நுட்பம் பயன்படுத்தி புலனாய்வு அதிகாரிகளுக்கு சிறப்பு பரிசு
ADDED : ஆக 30, 2011 12:29 AM
சென்னை : காவலர் பணித்திறன் போட்டிகளில், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலனாய்வு செய்யப்பட்ட, அமைச்சர் மரியம் பிச்சை கார் விபத்து, சிறுவன் தில்ஷன் கொலை வழக்கு உட்பட, மூன்று வழக்குகளில் அதிகாரிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக போலீசில், போலீசாரின் பணித்திறமையை கண்டறிவதற்கான காவல் பணித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2009 முதல், இப்போட்டிகளில் கூடுதலாக நடைமுறைப்பணியின் போது அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சிறந்த முறையில் புலனாய்வு செய்யும் அதிகாரிகள், அறிவியல் உதவியாளர்களுக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு, முதல் பரிசான, 15 ஆயிரம் ரூபாயை, அமைச்சர் மரியம்பிச்சை கார் விபத்து வழக்கில், சாலையில் பதிந்திருந்த டயர் தடம், காரில் பதிந்திருந்த பெயின்ட் படிவம், சுங்கச்சாவடி கேமராவில் இருந்த வாகன அடையாளத்தை பயன்படுத்தி, லாரி டிரைவரை பிடித்த திருச்சி, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கலையரசன், சென்னை தடயவியல் ஆய்வு மைய உதவி இயக்குனர் திருநாவுக்கரசு ஆகியோர் பெற்றனர். இரண்டாம் பரிசான, 10 ஆயிரம் ரூபாயை, சென்னை, தீவுத்திடல் அருகிலுள்ள ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷன் கொலை வழக்கில், முதலில் இளம் ராணுவ அதிகாரியை சி.பி.சி.ஐ.டி.,யினர் சந்தேகப்பட்ட போது, சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்ட திசை மூலம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிதான் சுட்டது என கண்டுபிடித்த, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் ராஜன், சென்னை தடயவியல் ஆய்வு துணை இயக்குனர் ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு, ராமநாதபுரத்தில் நடந்த வியாபாரி கொலை வழக்கை வாகனத்தின் பெயின்ட், பின்புற விளக்கு மூலம் கண்டுபிடித்த உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், அறிவியல் அதிகாரி ஜீவானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


