Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவி பலி: கண்டித்து கிராம மக்கள் மறியல்

மாணவி பலி: கண்டித்து கிராம மக்கள் மறியல்

மாணவி பலி: கண்டித்து கிராம மக்கள் மறியல்

மாணவி பலி: கண்டித்து கிராம மக்கள் மறியல்

ADDED : ஆக 03, 2011 01:25 AM


Google News
அன்னூர் : பள்ளி மாணவி விபத்தில் இறந்ததை கண்டித்து கிராம மக்கள், அன்னூரில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அன்னூரிலுள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தவர் கோகிலா (14). நேற்று முன் தினம் மாலை பள்ளி வகுப்பு முடிந்து பஸ் ஏறும்போது சரக்கு ஆட்டோ மோதி இறந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கதவுகரை மற்றும் அன்னூர் பகுதி மக்கள் 100 பேர் நேற்று காலை 8.30 மணிக்கு, கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் எஸ்.ஐ.,க்கள், போலீசார் வந்தனர். போலீசாரிடம் மக்கள் கூறியது: பள்ளி முன் விபத்து நடந்தும் நிர்வாகம் அலட்சியம் காட்டியுள்ளது. மாணவிகள் பஸ்ஸில் ஏறும்போது செக்யூரிட்டி நியமித்து, பாதுகாப்பாக பஸ் ஏற உதவி செய்யவில்லை. இவ்வாறு புகார் தெரிவித்தனர். பள்ளி நிர்வாக அலுவலர் பாக்கியலட்சுமி பேசுகையில்,''போலீசாருடன் கலந்து பேசி பள்ளி முன் உடனே 'டிவைடர்' வைக்கப்படும். தினமும் காலை மற்றும் மாலையில் பள்ளி சார்பில் ஒருவர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டு மாணவ, மாணவியர் பாதுகாப்பாக பஸ்சில் ஏறவும், இறங்கவும் உதவுவார்கள்,'' என்று தெரிவித்தார். போலீசார் கூறுகையில், ''அனைத்து பள்ளிகள் முன்பும் டிவைடர் வைக்கப்படும். காலை மற்றும் மாலையில் போலீசார் நிறுத்தப்பட்டு, விபத்து ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us