ADDED : ஜூலை 21, 2011 10:10 AM
சென்னை: 'மனதை சரியாகப் பயன்படுத்தினால், லட்சியம் சரியான பாதை நோக்கி பயணம் செய்யும்,'' என்று தியானப் பயிற்சியாளர் சந்தானம் பேசினார்.
சங்கர்லால் சுந்தர்பாய் சாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட தொடக்க விழா நடந்தது. இதில் தி. நகர் எம்.எல்.ஏ., கலைராஜன், ஜெயின் கல்லூரி செயலர் அபயகுமார், இணைச் செயலர் கியான் ஜெயின், கல்லூரி முதல்வர் பத்மா சங்கர், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை மைய இயக்குனர் ராஜா உசேன் மற்றும் 'மீடியா ஒன் கிரியேட்டர்ஸ்' இயக்குனர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பிறகு, மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தும் தியான வகுப்பு நடந்தது. இதில் தியான பயிற்சியாளர் சந்தானம் பேசியதாவது: உடலை ஒருமுகப் படுத்துவது யோகா; மனதை ஒருமுகப் படுத்துவது தியானம். மனம், அறிவு, புத்தி ஆகிய மூன்றும் மனிதனின் செயல்களை தீர்மானிக்கிறது. அறிவு என்பது விரிந்து கொண்டே போகும்; செயல்கள் அனைத்திற்கும், இடையூறு செய்வது மனம்; மனதிற்கும், அறிவிற்கும் இடையில் இருப்பது புத்தி. மனது கெட்டதை செய்வதற்கு தூண்டும்; கெட்டதை நினைக்காமல், மனதை ஒருமுகப்படுத்தி நமக்குள் லட்சியங்களை உருவாக்கி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். மற்றவர்களின் துன்பத்தை, நம் துன்பம் போல் நினைத்தால், மற்றவர்களுக்கு நாம் துன்பம் செய்ய மாட்டோம். மனது தான் மனிதனை உருவாக்குகிறது. இந்த உலகத்தில் <உள்ள அனைத்திற்கும், ஒரு விதி உள்ளது. பயன்படுத்துவதைப் பொறுத்து, விதி மாறுபடும். விதியை மதியால் வெல்லமுடியும். மகிழ்ச்சியாக இருந்தால், நீண்டநாள் வாழமுடியும். மனதில் உள்ள, தேவை இல்லாத குப்பைகளை களைந்தால், நாமும் கடவுள் ஆகலாம். இலட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள். மனதை சரியாகப் பயன்படுத்தினால், லட்சியம் சரியான பாதை நோக்கி பயணம் செய்யும். இவ்வாறு சந்தானம் பேசினார்.
இறுதியில் புத்தாசனம் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் மனது ஒருமுகப்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர்.


