பஸ்கள் இருக்கு; டீசல் இல்லை: சிறப்பு பஸ் இயக்கம் "அம்போ'
பஸ்கள் இருக்கு; டீசல் இல்லை: சிறப்பு பஸ் இயக்கம் "அம்போ'
பஸ்கள் இருக்கு; டீசல் இல்லை: சிறப்பு பஸ் இயக்கம் "அம்போ'
ADDED : அக் 09, 2011 01:41 AM
சேலம்:சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான டீசல் தட்டுப்பாடு காரணமாக, பண்டிகை சீசனில் சிறப்பு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கையும், சத்தமின்றி குறைக்கப்பட்டுள்ளது.பண்டிகை சீசனில் பயணிகளின் வசதிக்காக, சேலம் கோட்டம் சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகைகளுக்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்கள், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக, விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரயில்கள் அனைத்திலும் டிக்கெட் முன்பதிவு முடிவடைந்துள்ளது. மற்ற பயணிகள், அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களையே நம்பியுள்ளனர்.
பண்டிகை சீசனில், சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து 160 பஸ்கள், தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இயக்கப்படும். ஆனால், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான டீசல் தட்டுப்பாடு காரணமாக, வழக்கமான பஸ்களையே இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சேலம் கோட்டத்தில் உள்ள 14 பணிமனைகளிலும், 160 ஸ்பேர் பஸ்கள் தயாராக உள்ளன. போதுமான டீசல் இல்லாததால், இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பண்டிகையை முன்னிட்டு, தேவையான சிறப்பு பஸ்களை இயக்கும் வகையில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் டீசல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


