"அல்லக் கைகளை' சமாளிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறல்
"அல்லக் கைகளை' சமாளிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறல்
"அல்லக் கைகளை' சமாளிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறல்

வேட்பாளர்கள் பலர் தங்களின் 'அல்லக் கைகளை' சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
''கையை பிடிச்சு... காலை பிடிச்சு... 'சீட்' வாங்கியாச்சு. எப்படியாவது ஜெயிக்கணும்,'' என்ற வெறியில் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். கந்து வட்டிக்கு கடன் வாங்கி வேட்பாளர்கள் செலவு செய்கின்றனர். அரசியல் வாதிகளை நம்பி கடன் கொடுக்க கந்து வட்டிக்காரர்கள் முன் வருவதில்லை. இதற்காக சொத்து பத்திரங்களை ஈடாக கொடுத்து கடன் பெற்று செலவுகளை செய்கின்றனர்.
சம்பளம் எவ்வளவு: ''ஆட்டோ ஓட்டுனா தினமும் குறைஞ்சபட்சம் ரூ.300 கிடைக்கும். உங்க கூட வந்தா... பொழப்பு போகும். வீட்டுக்கு சாப்பாடு செலவு, என் செலவுக்கு எங்க போறது...,'' என கேட்கின்றனர். இதற்காக தினமும் ரூ.300 சம்பளம் கொடுத்தும், குவார்ட்டருக்கு ரூ.100 கொடுத்தும் ஆட்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வேட்பாளர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர். பிரசாரத்திற்கு வரும் பெண்களுக்கு ரூ.200. வயதானவருக்கு ரூ.100. கொடி பிடித்து விசிலடித்து வரும் சிறுவர்களுக்கு காலையில் தலா ரூ.30. மாலையில் தலா ரூ.20 கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
முடியலைடா சாமி: தேர்தல் செலவுக்காக தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 'கையில் அரைக் காசும் இல்லை; கடன் கொடுப்பார் யாருமில்லை' என பலர் திக்குமுக்காடி வருகின்றனர். தேர்தல் செலவுக்கு மேலிடங்கள் கைவிரித்துள்ள நிலையில் 'அல்லக் கைகளுக்கு' 'அள்ளி'ப்போடா விட்டாலும் கூட குறைந்தபட்சம் 'கிள்ளி'ப் போடக்கூட முடியாமல் வேட்பாளர்கள் பலர் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-


