ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை
ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை
ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை
ADDED : அக் 03, 2011 11:23 PM

சென்னை: ''முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.,வினர் மீது வழக்குகள் போடுவதையும், வீடுகளில் சோதனையிடுவதையும் தவிர்த்து, ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்த அறிக்கை: மின் பற்றாக்குறை பற்றி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'தான் பதவியேற்ற மூன்று மாதங்களில், மின் பற்றாக்குறையை சரிப்படுத்துவேன்' என, பதவிக்கு வரும் முன் ஜெயலலிதா கூறினார். தற்போது, காற்றின் அளவு குறைந்ததால், காற்றாலை மின்சார அளவு வெகுவாக குறைந்துள்ளதாக கூறுகிறார். இதையே கடந்த ஆட்சியில், ஆற்காடு வீராசாமி கூறியபோது, 'தி.மு.க., ஆட்சி, இருள் ஆட்சி' என்றார். இப்படியொரு, இக்கட்டான நிலை வரும் என்பதை அவர் எதிர்பார்க்காமல், கடந்த ஆட்சியில் அவர் கூறிய வார்த்தைகள், அவரையே திரும்ப கேட்கும் அளவுக்கு பல பிரச்னைகள் உருவாகியுள்ளன.
மின்சாரத்தில் மட்டுமல்ல; கூலி உயர்வு கேட்டு, விசைத்தறியாளர்களும், தொழிலாளர்களும், கடந்த 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்கின்றனர். மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க.,வினர் மீது சங்கிலி தொடர் போல் பொய் வழக்குகள் போடுவதும், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனையிடுவதும் தொடர்கிறது.
ஜெயலலிதா தன் கவனத்தை ஆரோக்கியமற்ற பாதையிலிருந்து திருப்பி, மக்கள் பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமாக கவனத்தை செலுத்துவது அவருக்கும், மாநிலத்திற்கும் நல்லது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


