ADDED : ஆக 30, 2011 12:37 AM
கோவை : ரோட்டில் அனாதையாக கிடந்த 10 ஆயிரம் ரூபாயை மீட்ட நால்வர், அதிகாரிகளின் அறிவுரைப்படி, ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.கோவை பாப்பநாயக்கன்பாளையம் குப்பண்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (42).
இவரது நண்பர்கள் குப்புராஜ் (39), ராஜ்குமார் (47). இவர்கள், கடந்த 26ம் தேதி இரவு 8 மணிக்கு சமையல் பாத்திரங்களை ஒப்படைப்பதற்காக, பாரதியார் ரோட்டில் உள்ள கடைக்கு ஆட்டோவில் சென்றனர்.ஆட்டோவை, டிரைவர் சண்முகம் (41) ஓட்டினார். பாரதியார் ரோட்டில், புதிய திட்டச்சாலை பிரியும் இடத்தில், அரசு பிருந்தாவன் பூங்கா, சித்தா மருத்துவமனை எதிர்புறம், ஒரு பை கிடந்தது. அதை பாலகிருஷ்ணன் பார்த்தார்; குப்புராஜ் எடுத்தார்.பையை திறந்து பார்த்தபோது, அதில், டிபன் பாக்ஸ், நூறு ரூபாய் கட்டு ஒன்று ஆகியன இருந்தன. 'பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் இருந்த அந்த பையை அங்கு தவற விட்டுச்சென்றவர் யார்' என்று தெரியாததால், நால்வரும் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.அவர்களிடம் விசாரித்த கலெக்டர் கருணாகரன், பணத்தை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். கமிஷனர் அலுவலகம் சென்ற நால்வரும், அதிகாரிகளின் ஆலோசனைப்படி, ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வசம் பணத்தை ஒப்படைத்தனர்.'தவற விட்டவர்கள், உரிய விவரங்களை தெரிவித்து பை மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்' என்று, போலீசார் தெரிவித்தனர்.


