ADDED : ஜூலை 26, 2011 12:11 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகே, கார் மீது மணல் லாரி மோதியதில், மலையாள சினிமா இயக்குனர் மகள் உட்பட மூன்று பேர், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஜோஷி. சினிமா இயக்குனர். இவரது மகள் ஐஸ்வர்யா, 24. செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவருடன், திருச்சூரை சேர்ந்த ராஜூ மகன் அர்ஜூன், 24, எர்ணாகுளத்தை சேர்ந்த, ராமச்சந்திரன் மகள் ராதிகா, 24, அரவிந்த்பாபு மகன் அஸ்வின், 27, ஜார்ஜ் மகன் ஏசுதாஸ், 24, ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.ஐந்து பேரும், ஊரப்பாக்கம் ரயில் நகரில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் வேகன் காரில் (பதிவு எண்: கே.எல்.08, ஏ.எஸ்.8995) மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். இரவு மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்கு திரும்பினர். மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிராமம் அருகே, இரவு 11.30 மணிக்கு சென்றபோது, எதிரே வந்த மணல் லாரி, நேருக்கு நேர் கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த, ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.போலீசார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் ராதிகா இறந்தார். இவ்விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பின் சீரானது. விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.