செங்கல்பட்டு - அரக்கோணம் பாசஞ்சர் ரயில் திருப்பதி வரை நீட்டிக்கப்படுமா?
செங்கல்பட்டு - அரக்கோணம் பாசஞ்சர் ரயில் திருப்பதி வரை நீட்டிக்கப்படுமா?
செங்கல்பட்டு - அரக்கோணம் பாசஞ்சர் ரயில் திருப்பதி வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : ஆக 30, 2011 12:13 AM
நகரி : தென் தமிழக நகரங்களில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, திருப்பதிக்கு
செல்லும் பக்தர்கள், பொது மக்கள் நலன் கருதி, செங்கல்பட்டு - அரக்கோணம்
பாசஞ்சர் ரயிலை, திருப்பதி வரை நீட்டிக்க வேண்டும் என, பயணிகள்
எதிர்பார்க்கின்றனர். தென் தமிழகத்தில், கோவில் நகரங்களான கன்னியாகுமரி,
ராமேஸ்வரம், திருச்செந்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி போன்ற புண்ணிய
ஷேத்திரங்களில் இருந்து, ரயில்கள் மூலம் வரும் பக்தர்கள், சென்னை வழியாக
திருப்பதிக்கு வருகின்றனர். இதனால் காலதாமதமும், பயணச் செலவுகளும் கூடுதல்
ஆகிறது. தமிழகத்தில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக, செங்கல்பட்டில்
இருந்து திருப்பதி வரை, காஞ்சிபுரம் வழியாக பாசஞ்சர் ரயிலை இயக்கினால்,
பலவகையில் வசதி கிடைக்கும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது தினமும் செங்கல்பட்டில் இருந்து, காலை 7 மணிக்கு காஞ்சிபுரம்
வழியாக, அரக்கோணம் வரை பாசஞ்சர் ரயில், பல ஆண்டுகளாக இயக்கப்படுகிறது. காலை
9.30 மணிக்கு அரக்கோணம் வந்தடையும் இந்த ரயில், மீண்டும் மாலை 5.30
மணிக்கு தான் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு திரும்பி செல்கிறது.
அதுவரை அரக்கோணம், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. 8 மணி
நேரம் நிறுத்தி வைக்கப்படும் இந்த பாசஞ்சர் ரயிலை அரக்கோணத்தில் இருந்து,
திருப்பதி அல்லது ரேணிகுண்டா வரை, ஒரு முறை மட்டும் இயக்கினால் திருமலைக்கு
செல்லும் பக்தர்கள் மற்றும் அரக்கோணம், திருத்தணி, நகரி, புத்தூர் ஆகிய
பகுதி பொதுமக்களும் பயனடைவர். மேலும், காலை நேரத்தில் தென் தமிழக
நகரங்களில் இருந்து சுவாமி தரிசனத்திற்காக காஞ்சிபுரம், திருத்தணி மற்றும்
திருப்பதி போன்ற கோவில் நகரங்களுக்கு செல்லும் பக்தர்கள் சென்னை செல்லாமல்,
செங்கல்பட்டில் இறங்கி, அங்கிருந்து இந்த பாசஞ்சர் ரயில் மூலம், மேற்கண்ட
கோவிலுக்கு செல்வர். பகல் நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற
இடங்களுக்கு செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் வசதியாக
இருக்கும். காலை 10 மணிக்கு பின்னர் திருப்பதியில் இருந்து சென்னை
செல்வதற்கும், திருத்தணி, அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக, பிற நகரங்களுக்கு
செல்லும் பக்தர்கள், பொதுமக்களுக்கும் ரயில் வசதியில்லை. திருப்பதிக்கு
வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி, தெற்கு ரயில்வே உயரதிகாரிகள்
செங்கல்பட்டு - அரக்கோணம் பாசஞ்சர் ரயிலை, திருப்பதி வரை நீடிக்க வேண்டும்
என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


