ADDED : செப் 10, 2011 03:45 AM
சாயர்புரம் : சாயர்புரம் அருகே உள்ள புளியநகரில் விவசாயத்தில் நஷ்டம்
ஏற்பட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விவசாயி தற்கொலை செய்து
கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, சாயர்புரம் அருகே உள்ள
புளியநகர் வடக்கு தெருவை சேர்ந்த ரத்தினசாமி மகன் முருகேசன்(56). இவர்
கட்டுகுத்தகைக்கு வயல் எடுத்து விவசாயம் செய்து வந்தார். விவசாயம்
செய்வற்கு வீட்டில் இருந்த நகைகளை பாங்கில் அடமானம் வைத்துள்ளார்.
விவசாயத்தில் அவரால் லாபம் ஈட்ட முடியவில்லை.
தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாங்கில் அடகு வைத்த நகைகளை
அவரால் மீட்க முடியவில்லை. இதனால் இவர் அடிக்கடி என் நகைகளை மீட்க வழி
தெரியவில்லையே என்று தன் நண்பர்கள் மற்றும் ஊராரிடம் கூறி வந்துள்ளார்.
மேலும் இதனால் மனமுடைந்த அவர் இரவு மாடியில் படுக்க செல்வதாக தன்
மனைவியிடம் கூறிவிட்டு அங்குள்ள பூச்சி மருந்தை குடித்துள்ளார். சிறிது
நேரம் கழித்து அவரது மனைவி அவரை சாப்பிட அழைக்க மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தில்
உள்ளவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்சை வரவழைத்து தூத்தக்குடி அரசு
ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சாயர்புரம் எஸ்ஐ.,பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சாயர்புரம் பகுதிகளில் விவசாயம் செய்து
வருபவர்கள் பலத்த நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் அணையில்
இருந்து பாசனத்திற்கு சரியான அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும் விவசாய
விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காதது, விவசாய கூலி வேலைக்கு ஆள்
பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களை கூறலாம்.
இதனால் விவசாயிகள் இப்பகுதிகளில் வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல்
திண்டாடி வருகின்றனர். அரசு விவசாயிகளின் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு
அவர்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி
விவசாயிகள் விரும்புகின்றனர்.


