Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வல்லக்கோட்டை பட விவகாரத்திலும் சக்சேனா, ஐயப்பன் கைது

வல்லக்கோட்டை பட விவகாரத்திலும் சக்சேனா, ஐயப்பன் கைது

வல்லக்கோட்டை பட விவகாரத்திலும் சக்சேனா, ஐயப்பன் கைது

வல்லக்கோட்டை பட விவகாரத்திலும் சக்சேனா, ஐயப்பன் கைது

ADDED : ஜூலை 15, 2011 08:14 PM


Google News
சென்னை:'சன் பிக்சர்ஸ்' சக்சேனா மீது, 'வல்லக்கோட்டை' பட தயாரிப்பாளர், 50 லட்சம் ரூபாய் மோசடி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.15ம் தேதி, சக்சேனா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், 'வல்லக்கோட்டை' என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி ஐயப்பன் ஆகியோரை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை அரசு வக்கீல்கள் கோபிநாத், மேரி ஜெயந்தி ஆகியோர், சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். அம்மனுவை ஏற்றுக்கொண்டு, வரும் 29ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.

ஜாமின் மனு தள்ளுபடி:சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஹித்தேஷ் ஜபக். 'மாப்பிள்ளை' பட வினியோகம் தொடர்பாக, 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மிரட்டியதாக ஜபக், கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். இவ்வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் அரசு வக்கீல்கள் கோபிநாத், மேனுவேல் அரசு ஆகியோர், சைதாப்பேட்டை 17வது கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். அம்மனு மீதான விசாரணை நடந்தது.

சக்சேனாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார். அதேபோல், சக்சேனாவின் ஜாமின் மனு மீதான விசாரணையும் நேற்று கோர்ட்டில் நடந்தது. அம்மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார்.

ஐயப்பனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை:சேலத்தை சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் சண்முகவேல், 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில் சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பன் மீது, போலீசில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக, ஐயப்பன் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இன்று மாலை அவரை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். ஐயப்பனுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வக்கீல் மனு தாக்கல் செய்தார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என, மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us