மக்கள் விடுதலை ராணுவத்தின் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
மக்கள் விடுதலை ராணுவத்தின் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
மக்கள் விடுதலை ராணுவத்தின் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
ADDED : அக் 07, 2011 10:45 PM

புதுடில்லி: தடை செய்யப்பட்ட இயக்கமான, 'மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் நக்சலைட்களுடன் சேர்ந்து பலமான ஐக்கிய முன்னணி ஒன்றை, அரசுக்கு எதிராக அமைக்க அவர்கள் சதி செய்ததும் தெரிய வந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த, 'மக்கள் விடுதலை ராணுவம்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள பயங்கரவாதிகள் திலீப் சிங், 51, அருண்குமார் சிங் சலாம், 36, என்ற இரண்டு பேரை கடந்த 2ம் தேதி, டில்லியில் போலீசார் கைது செய்தனர். இதில், திலீப் சிங் தன்னைத் தானே, மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவன் என, அறிவித்துக் கொண்டவன். அருண்குமார், அந்த அமைப்பின் வெளி விவகாரங்களை கவனித்துக் கொள்பவன். அவர்கள் இருவரும் கடந்த மாதம் 28ம் தேதி டில்லிக்கு வந்து, பல்வேறு நபர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும், நக்சலைட்கள் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து, அரசுக்கு எதிராகச் செயல்பட திட்டமிட்டுள்ளதும், பலமான ஐக்கிய முன்னணி ஒன்றைத் துவக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் லேப்-டாப்களை அவர்களிடமிருந்து டில்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர். மக்கள் விடுதலை ராணுவ இயக்கத்தினர், நக்சலைட்களுக்கு ஆயுதப் பயிற்சி, ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில், நக்சலைட்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளனர்.
அடுத்த ஆண்டில், மேலும் இரண்டு பயிற்சி முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


