/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சேர்மன் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., விழுப்புரத்தில் கட்சி தொண்டர்கள் ஆர்வம்சேர்மன் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., விழுப்புரத்தில் கட்சி தொண்டர்கள் ஆர்வம்
சேர்மன் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., விழுப்புரத்தில் கட்சி தொண்டர்கள் ஆர்வம்
சேர்மன் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., விழுப்புரத்தில் கட்சி தொண்டர்கள் ஆர்வம்
சேர்மன் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., விழுப்புரத்தில் கட்சி தொண்டர்கள் ஆர்வம்
ADDED : அக் 03, 2011 03:38 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி சேர்மன் பதவி 30 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க., வசமுள்ளது.
இந்த பதவியை அ.தி.மு.க., கைப்பற்றுமா என்ற ஆர்வம் அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
விழுப்புரம் நகராட்சி 1.10.1919ம் ஆண்டு துவக்கப்பட்டது. முதல் சேர்மனாக 9.1.22 முதல் 14.12.24ம் ஆண்டு வரை சுயேச்சையாக வெற்றி பெற்ற சுப்பராயப் பிள்ளை இருந்தார். பிறகு 15.12.24 முதல் 31.10.27 வரை காங்கிரசை சேர்ந்த சிதம்பர ஐயர், 2.11.27 முதல் 30.11.31 வரை சுய மரியாதை இயக்கம் சார்பில் வெற்றி பெற்ற கோவிந்தராஜூலு நாயுடு, 9.12.31 முதல் 31.10.34 வரை காங்.,சார்பில் வெற்றி பெற்ற சிதம்பர ஐயர் சேர்மனாக இருந்தனர்.
பின்னர் காங்.,சார்பில் 9.11.34 முதல் 31.3.38 வரை ராஜமாணிக்க பத்தர், 14.5.38 முதல் 30.3.41 வரை சிதம்பர ஐயர், 17.4.41 முதல் 30.3.47 வரை சுய மரியாதை இயக்கத்தை சேர்ந்த கோவிந்தராஜூலு நாயுடு சேர்மனாக இருந்தனர். பிறகு 20.10.47 முதல் 31.10.55 வரை சண்முகம் சேர்மனாக இருந்தார்.
காங்., சார்பில் வெற்றி பெற்று 11.11.55 முதல் 31.3.59 வரை கொண்டா ரெட்டியார், 20.4.59 முதல் 27.10.61 வரை அமிர்தராஜ், 24.11.61 முதல் 1.3.64 வரை டி.எஸ்.பத்தர் சேர்மனாக இருந்தனர். பின்னர் 18.3.64 முதல் 28.4.69 வரை சுயேச்சையாக வெற்றி பெற்று காங்கிரசில் இணைந்த டாக்டர் தியாகராஜன் சேர்மனாக இருந்தார். இதில் 1955ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு வரை காங்கிரஸ் வசமே சேர்மன் பதவி இருந்தது. பின்னர் 13.5.69 முதல் 30.6.76 வரை தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம் சேர்மனாகவும் இருந்தார்.
அ.தி.மு.க., ஆட்சியில் 1986ம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. பிறகு வந்த தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி அமைப்பு ஏற்படுத்தி 3.3.86 முதல் 1.3.91 வரை சண்முகம் எம்.எல்.ஏ., சேர்மனாக இருந்து, பதவி முடியும் நேரத்தில் அ.தி.மு.க.,விற்கு தாவினார்.
பின்னர் 1991 முதல் 1996ம் ஆண்டு வரை அ.தி.மு.க., அரசு உள்ளாட்சி அமைப்புகளை ரத்து செய்தது. பிறகு 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் உருவான பின் 25.10.96 முதல் 24.10.2001 வரை தி.மு.க.,சேர்மனாக ஜனகராஜ் இருந்தார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் எஸ்.எஸ். பன்னீர் செல்வம் போட்டியிட்டு தோற்றார்.
அடுத்த தேர்தலில் தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, 25.10.2001 முதல் 27.10.2006 வரை எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் சேர்மனாக இருந்தார். இவர் தி.மு. க.,விற்கு வந்ததும் சீட் வழங்கப்பட்டு வெற்றி பெற்றார். பதவி முடியும் நேரத்தில் அ.தி.மு .க.,விற்கு தாவினார். முன்னதாக நடந்த தேர்தலில் அ.தி. மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் வக்கீல் தயானந்தம் போட்டியிட்டு தோற்றார்.
பிறகு நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், கவுன்சிலர் மூலம் தேர்வாகி 28.10.2006 முதல் சேர்மனாக ஜனகராஜ் உள்ளார். தற்போது நேரடி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் பாஸ்கரன், தி.மு.க., சார்பில் நகர அவைத் தலைவர் சக்கரை, தே.மு.தி.க.,சார்பில் துரைசாமி சேர்மன், பா.ம.க., சார்பில் பெருமாள், பா.ஜ., சார்பில் நகர தலைவர் துரைக்குமார் களத்தில் உள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி கடந்த 1919ம் ஆண்டு துவக்கப்பட்டு பதவி வகித்த சேர்மன்கள் காங்கிரஸ், சுய மரியாதை இயக்கம், தி.மு.க.,வை சேர்ந்தவர்களாக இருந்தனர். அதில் 1969ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சேர்மன் பதவி தி.மு.க., வசமே உள்ளது. இடையில் 1976 முதல் 1986 வரை உள்ளாட்சி அமைப்பு இல்லை. 1969 முதல் 2011 வரையுள்ள 42 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் தவிர மீதமுள்ள ஆண்டுகளில் தி.மு.க., சேர்மனே பதவியில் இருந்துள்ளனர். விழுப்புரம் நகராட்சி தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாகவே இருந்துள்ளது.
சேர்மன்கள் சண்முகம், எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் வெற்றி பெற்று அ.தி.மு.க.,விற்கு தாவினர். நேரடியாக யாரும் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெறவில்லை. தற்போதைய தேர்தலில் 19வது சேர்மனாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாஸ்கரன் வர வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். சேர்மன் பதவியை அ.தி.மு.க., கைப்பற்ற வேண்டும் என்பதற்காக மாவட்ட செயலாளரான அமைச் சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் முகாமிட்டு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தி.மு.க., கோட்டையாக உள்ள விழுப்புரம் தொகுதியில் சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தொடர்ந்து தி.மு.க.,வசம் உள்ள சேர்மன் பதவியை மீண்டும் கைப்பற்ற வேண்டுமென அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த 2006 சட்டசபை தேர்தல், அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை விழுப்புரம் தொகுதியில் பெற்றுள்ளது. ஓட்டுகள் அக்கட்சிக்கு படிப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வந்துள்ளதால் தே.மு.தி.க.,வினரும் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
தற்போதைய நிலையில் நகராட்சி சேர்மன் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க.,- அ.தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தே.மு.தி.க.,-காங்.,- பா.ம.க., வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகள் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை அறிய முடியாமல் அனைத்து கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர். முடிவு வாக்காளர்கள் கையில் உள்ளது.


