ADDED : ஜூலை 14, 2011 09:46 PM
திருப்பூர் : கலெக்டர் வருகைக்காக அகற்றப்பட்ட கடைகள், ஒரே நாளில் மீண்டும்
அமைக்கப்பட்டன.
இதனால், மாநகராட்சியினர் நடத்திய ஆக்கிரமிப்பு அகற்றல்
நாடகம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள
மார்க்கெட் பகுதியில் உள்ள ரோட்டில், இருபுறத்திலும் தள்ளுவண்டி கடைகள்
மற்றும் பிளாட்பார கடைகள் ஏராளமாக உள்ளன. மேலும், மார்க்கெட்டில் இருந்து
கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுகள், அப்பகுதியில் மலை போல் குவிந்து
கிடக்கும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், அவ்வப்போது அகற்றுவர். இரு
சக்கர வாகனம், பாதசாரிகள் கூட, அவ்வழியாக செல்ல வழியிருக்காது.இப்பகுதியில்
உள்ள மாநகராட்சி தாய் சேய்நல விடுதியில் நேற்று முன்தினம் கலெக்டர் ஆய்வு
நடத்த வந்தார். கடந்த 11ம் தேதி, கலெக்டர் ஆய்வுக்கு வருவதாக தகவல்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தாய் சேய் நல விடுதி சுத்தமாக
பராமரிக்கப்பட்டது. கட்டட வளாகம் மற்றும் அறைகளை தூய்மைப்படுத்தும் பணியில்
ஊழியர்கள் வெகுதீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.பல்லடம் ரோட்டில் இருந்து
வரும் வழியில் உள்ள தள்ளுவண்டி மற்றும் பிளாட்பார கடைகள் அகற்றப்பட்டன.
கலெக்டர் ஆய்வு முடித்துச் செல்லும் வரை, எந்த கடையும் அங்கு
அமைக்கக்கூடாது என அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.நேற்று முன்தினம் கலெக்டர்
ஆய்வு செய்து சென்றதால், நேற்று காலை முதல் வழக்கம்போல் தள்ளுவண்டி மற்றும்
பிளாட்பாரக் கடைகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டு, வியாபாரம் பரபரப்பாக
நடந்தது. கலெக்டர் ஆய்வுக்கு வரும்போது, அவருக்கு போக்கு காட்டும் வகையில்,
கடைகளை அகற்றிவிட்டு, மீண்டும் அமைத்த பின், அதிகாரிகள் கண்டும் காணாமல்
உள்ளனர்.


